வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஹோட்டல் அதிபருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வற்புறுத்தினாரா ப.சிதம்பரம்?

P Chidambaram
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பெரிய ஹோட்டல் அதிபருக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ் பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்று குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
2ஜி ஊழல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பங்கு உள்ளது என்று கூறி அவரை பதவி விலகுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் ப. சிதம்பரம், சுனைர் ஹோட்டல்களின் அதிபர் எஸ்.பி. குப்தாவுக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ் பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்றும், அவரது தலையீட்டின்பேரில் வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டன என்றும் செய்தி வெளியானது. ப.சிதம்பரம் 1999-2003ம் ஆண்டு வரை எஸ்.பி. குப்தாவுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.

இந்த செய்தியைப் படித்த எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றம் கூடியதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ப. சிதம்பரம் பதவி விலகக் கோரி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே ப. சிதம்பரம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி ஆளுநரின் உத்தரவின்பேரில் வாபஸ் பெறப்பட்ட 3 வழக்குள் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: