ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கேரளாவுக்கு அனுப்பப்படும் 1000 டன் காய்கறிகளை நிறுத்தி வைத்து நாளை ஒட்டன்சத்திரத்தில் போராட்டம்

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் நாளை கேரளாவுக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். நாளை கேரளாவுக்கு இங்கிருந்து ஒரு காய்கறி கூட போகாது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்று ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட். இங்கிருந்துதான் கேரளாவுக்கு தேனி மாவட்டம் வழியாக பெருமளவில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை செல்கின்றன.
கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து வியாபாரிகள் இங்கு வருவது நின்று போய் விட்டது. மேலும் குமுளி வழியாக வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டதால் ஒட்டன்சத்திரத்திற்கு கேரள வியாபாரிகள் வர முடியவில்லை.
ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டிலிருந்து வேறு ஊர்கள் வழியாக காய்கறிகளை வாங்கி வந்தனர் கேரள வியாபாரிகள். தற்போது ஒட்டன்சத்திரம் வியாபாரிகள், கேரள வியாபாரிகளுக்கு காய்கறிகள் தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதன்பொருட்டு நாளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் நகரிலும் கடைகள் அடைக்கப்படுகின்றன.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும் வரையில் கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இங்கிருந்து தினசரி கிட்டத்தட்ட 1000 டன் காய்கறிகள் கேரளாவுக்குப் போகிறது. இதை நாளை முதல் நிறுத்துகிறோம் என்றனர்.

கருத்துகள் இல்லை: