சனி, 1 அக்டோபர், 2011

புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.

ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.
இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் கிராமப்புறங்களில், 20 சதவீதம், நகர்ப்புறங்களில், 12.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வே தெரிவிக்கிறது. இதே வேகம் நீடித்தால், "இனிவரும் காலங்களில், புகையிலை தொடர்பான நோய்களால், 2020ல், இந்தியாவில், 20 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்' என்ற, அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது.
இது குறித்து, புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாநில ஆலோசகர் பிரசன்னா கண்ணன் கூறும்போது, ""புகையிலை பொருட்களான சிகரெட், பான்பராக், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2008ல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இன்று வரை குறையவில்லை. இதற்கு மக்களிடையே புகையிலை குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். தற்போது, புகையிலை நோய்களால், இந்தியாவில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.

புகை பிடிக்கும் பெண்கள்:
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது' என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை: