வியாழன், 25 நவம்பர், 2010

மொத்த மூலதனச் செலவில் 25 வீதம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கீடு

நாட்டின் மொத்த மூலதனச் செலவினத்தில் 25% வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சபை முதல்வர்- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, வடக்கு, கிழக்கை இராணுவ மயப்படுத்த அல்லவென்று தெரிவித்த அமைச்சர் சில்வா, வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து எதிர்கால பணிகளை அரசாங்கம் முன்னெடுக்குமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்:-
இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லையென சில தமிழ் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது தவறு. வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற் திட்டத்துக்கு 59.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கின் உதயம் செயற்திட்டத்திற்கு 26.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20.4 மில்லியன் மக்கள் உள்ளனர். இதில் 13% உள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மொத்த மூலதனச் செலவினத்தில் 1/4 பகுதி (25%) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை இராணுவ மயப்படுத்துவதற்காக அல்ல. ஒதுக்கப்பட்டுள்ள 215.2 பில்லியனில் 71% முப்படையினருக்கு சம்பளம் வழங்கவும், வேறு வசதிகளை செய்து கொடுக்கவும்தான். ஆழமான பொருளாதார நியமங்களைக் கொண்டு இந்த வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிறந்த பொருளாதார முகாமைத்துவம் நிறைந்த இத்திட்டத்தைக் குறைகூற முடியாதுஎன்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை: