வியாழன், 25 நவம்பர், 2010

எமக்கு உரிமை இல்லாத இடங்களில் விகாரைகளை அமைக்கக் கூடாது: சபையில் ஐ.தே. கட்சி பா.உ.

எமக்கு உரிமையில்லாத இடங்களில் தேவையற்ற வகையில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது. மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் உருவாக நாம் இடமளிக்கக்கூடாது என்று ஐ.தே.கவின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
எந்த மதமாக இருந்தாலும் நாம் அதை மதிக்கவேண்டும். எமக்கு உரிமையில்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாக நாம் இடமளிக்கக்கூடாது.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஏன் அப்படியானதொரு நிலைக்கு அடித்தளமிடுகிறீர்கள்?
இலங்கை சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளதால் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் அதிகாரப் போட்டியில் குதித்துள்ளன. இது தொடர்ந்தால் ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைதான் இலங்கையிலும் ஏற்படும்.
சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் இலங்கை செய்யும் ஒப்பந்தங்களால் இங்கு சர்வதேச பயங்கரவாதமே தோன்றும். யுத்த காலத்தில் சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் எமக்கு உதவியமைக்காக நாம் எமது நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்கக் கூடாது.
இன்னும் 5,10 வருடங்களில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் சக்திகள் எழுந்து நிற்கும். சர்வதேச பயங்கரவாதத்தின் மிரட்டல் அதிகரிக்கும். இதை நினைக்கும்போது எனது உடம்பு நடுங்குகிறது. எனவே, சர்வதேச அதிகாரப் போட்டிக்கு இடமளிக்காதீர்கள்.
பௌத்தத்திற்குத் தலைசிறந்த நாடான தாய்லாந்து விபசாரத்தால் சீரழிந்து போகின்றது. தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதற்காக இலங்கை வருகின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தால் தாய்லாந்தின் நிலைமைதான் இலங்கைக்கும் ஏற்படும். என்றார்.

கருத்துகள் இல்லை: