சனி, 28 மார்ச், 2026

திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்..வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணங்கள்

 tamil.oneindia.com-  Mani Singh S  :  சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர் லிஸ்ட் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதம் ஆகியுள்ளது. 
எப்போதும் ரேசில் முந்தும் திமுக இந்த முறை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு கூட்டணி கட்சிகள் வைக்கும் நெருக்கடியே காரணம் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ்-28, தேமுதிக -10, விடுதலைச் சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் கட்சி-2 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.



இதுதவிர மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி. பி.ஐ., தமிழர் தேசம் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கொடுக்கப் பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக, 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக களம் காண்கிறது. இதில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது. 150 தொகுதிகளுக்கு மேல் அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் நேற்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
விட்டுக் கொடுக்க மறுக்கும் காங்கிரஸ்

எனினும், காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சில குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டு அடம் பிடிப்பதால், தொகுதி பங்கீடு இறுதியாவதில் தாமதம் ஆகியுள்ளது. அதாவது, கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் இந்த முறை திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இரண்டு தொகுதிகளுமே காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் அக்கட்சி இதை விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறது.
விடாப்பிடியாக கேட்கும் தேமுதிக

இதனால், தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை லட்டு போல தூக்கிய பிரேமலதாவும், ரிஷிவந்தியம் தொகுதியை விடாப்பிடியாக கேட்டு வருகிறாராம். அதேபோல, விருகம்பாக்கம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளையும் தேமுதிக கேட்பதாக தெரிகிறது. இந்த மூன்றுமே திமுக பலம் வாய்ந்த தொகுதி என்பதால், இவற்றை விட்டுக்கொடுக்க திமுகவிற்கு மனம் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தேமுதிக, விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்துவிட்டு நமக்கு குறைத்துவிட்டார்கள் என்ற அப்செட்டில் இருக்கிறதாம். இதனால் திமுக செல்வாக்கான தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சி காய் நகர்த்தி வருகிறது. இதன் காரணமாகவே திமுக கூட்டணியில் தொகுதி பட்டியல் இறுதியாவது தாமதம் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்றைக்குள் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: