செவ்வாய், 11 ஜூன், 2024

நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் ! முன்பகுதி பலத்த சேதம் !

 வீரகேசரி  : ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது.
அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது.
இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன.



ஆனால், மூன்று அடுக்குகளை கொண்டு பலப்படுத்தப்பட்ட ஜன்னல்களால் விமானத்திற்குள் ஆலங்கட்டி மழை ஊடுருவவில்லை.

மணித்தியாலத்திற்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணிக்கும் போது ஆலங்கட்டி மழை அல்லது பிற கடினமான பொருட்களால் தாக்கப்பட்டால் உடைந்து போகாமல் இருப்தை உறுதிப்படுத்த விமானத்தின் கண்ணாடிகள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், சேதத்தை பொருட்படுத்தாமல் விமானம் பத்திரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விமானத்தில் பயணித்த எம்மேலி ஓக்லி என்ற பயணி சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் ,

“நாங்கள் தரையிறங்குவதற்கு சுமார் 20 நிமிடங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மேகத்திற்குள் நுழைந்தோம், விமானத்தில் கொந்தளிப்பு தொடங்கியது.” என்றார்.

இதேவேளை 2017 ஆம் ஆண்டில், இதேபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்ட விமானம் பத்திரமாக தரையிறக்கிய பின்னர் விமானி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: