வெள்ளி, 14 ஜூன், 2024

ATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயர்கிறது!

 zeenews.india.com  -  Sripriya Sambathkumar :  ATM Withdrawal Charges: நாட்டில் டிஜிட்டல் பண பரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், இன்னும் ரொக்க பயன்பாடும் இருந்துகொண்டு தான் இருக்கின்றது.
பணத்தை அதிக அளவில் வீட்டில் வைத்துக்கொள்ளாமல், அவ்வப்போது ஏடிஎம் -களில் பணத்தை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து அடிக்கடி பணம் எடுக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நிர்ணயிக்கப்பட்ட இலவச வரம்பிற்கு மேல் ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுத்தால், இனி அதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது ஏடிஎம் பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தியாக வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.



ஏடிஎம் ஆபரேட்டர்கள்

இது தொடர்பாக நாட்டில் உள்ள ஏடிஎம் ஆபரேட்டர்கள் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) மற்றும் இந்திய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் (National Payment Corporation of India) ஆகியவற்றைத் தொடர்பு கொண்டுள்ளனர். மாற்றுக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏடிஎம் ஆபரேட்டர்கள் (ATM Operators) கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏடிஎம் ஆபரேட்டர்களின் கோரிக்கை என்ன?

ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (CATMI), பரிமாற்றக் கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது வணிகத்திற்கான அதிக நிதியை உறுதிப்படுத்த உதவும். ஏடிஎம் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் ட்ரான்சாக்ட் டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குனர் ஸ்டான்லி ஜான்சன், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிமாற்ற விகிதம் அதிகரிக்கப்பட்டது. நாங்கள் ரிசர்வ் வங்கியைத் (RBI) தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்களும் அதிகரிப்பை ஆதரிப்பதாகத் தெரிகிறது. நாங்கள் அதாவது CATMI, கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளோம்.அதே நேரத்தில் மேலும் சில ஏடிஎம் தயாரிப்பாளர்கள் இதை ரூ.23 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் கூறவில்லை." என்றார். பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிப்பது NPCI ஆல் எடுக்கப்பட்ட முடிவு என ஒரு ஏடிஎம் உற்பத்தியாளர் கூறினார்.


2021 இல் அதிகரிப்பு இருந்தது

2021 ஆம் ஆண்டில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான (ATM Transactions) பரிமாற்றக் கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம் பரிமாற்றம் என்பது கார்டு வழங்கும் வங்கியால் பணம் எடுக்க அட்டையைப் பயன்படுத்தும் வங்கிக்கு செலுத்தப்படும் கட்டணமாகும்.  பரிமாற்றக் கட்டணம் அதிகமாக இருந்தால், இந்த கட்டணத்தை ஈடுசெய்ய, வங்கிகள் இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத்தை அதிகரிக்கக்கூடும். தற்போது, ​​பரிவர்த்தனைக்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு ரூ.21 வரை வசூலிக்கப்படுகிறது.

தற்போது, ​​சேமிப்புக் கணக்கு (Savings Account) வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாக உள்ளன. அதே நேரத்தில், சில வங்கிகளில் ஏடிஎம் -களில் (ATM) மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக உள்ளன. இதற்குப் பிறகு, பல்வேறு வங்கி ஏடிஎம்களில் இருந்தும் பல்வேறு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: