புதன், 8 மார்ச், 2023

அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளர்வதால் பா.ஜ.க.வினர் தாமாக இணைகிறார்கள!. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 மாலைமலர் :சென்னை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல் வீசினால் உடைவதற்கு அ.தி.மு.க. என்பது கண்ணாடி அல்ல. அ.தி.மு.க. என்பது ஒரு சமுத்திரம், பெருங்கடல். அதில் கல் வீசினால் கல்தான் காணாமல் போகும். ஆனால் சமுத்திரம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இன்று எழுச்சியுடன் உள்ளது. அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளர்வதால் பா.ஜ.க.வினர் விருப்பப்பட்டு தாமாக முன் வந்து இணைகிறார்கள்.
நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. தாமாக முன்வந்து இணைவதை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும்.


அந்த பக்குவம் அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும். இதேபோல் எல்லா கட்சியில் இருந்தும் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். எழுச்சி, வலிமை, பலத்துடன் அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளருவதால்தான் எல்லோரும் வந்து சேருகிறார்கள். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. பெருந்தன்மையோடு இருக்க வேண்டும்.

நான் ஜெயலலிதா ஆட்சியின்போது முதல்வராக ஆசைப்பட்டதால் என்னை பதவியைவிட்டு நீக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். அப்படி நீக்கி இருந்தால் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்திருப்பாரா? என்னை ஜெயிக்க வைத்து அமைச்சராகவும் ஆக்கினார்.

எனது நண்பராக இருந்த வைத்திலிங்கம் தரந்தாழ்ந்து பேசுகிறார். அவர் வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார். அவர் வஞ்சத்தில் இருந்து மீண்டு இங்கு வந்தால் நன்றாக இருக்கும்.

ஜெயலலிதா போல ஒரு தலைவர் இனி யாரும் பிறக்கப்போவது கிடையாது. ஆற்றல், நிர்வாகத்திறமை, அரவணைத்து செல்லும் பண்பு, அன்பானவர்களுக்கு மென்மை கரம், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு இரும்பு கரம் கொண்டவர் அவர்.

ஒரு கட்சியில் இருப்பவர்களிடையே உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகளை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். தலைவரே அந்த உணர்ச்சிகளை தூண்டக்கூடாது.
கூட்டணி தர்மம் என்ற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அதை உணர்ந்து அந்த வகையில் நடவடிக்கை எடுத்தால் நல்லது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் சொல்லி விட்டனர்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரத்தில் கட்சியில் இருந்து விலகிய சிலர் அவர்களின் ஆதங்கத்தை சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: