சனி, 11 மார்ச், 2023

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பான் பெண் மீது டெல்லி இளைஞர்கள் பாலியல் அத்துமீறல்

கலைஞர் செய்திகள் - Lenin : . டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் பெண் மீது அத்துமீறிய இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மக்கள் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டங்களில் போது இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் அப்பகுதி மக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் மீது வண்ணம் பூசுவதுபோல் இளைஞர்கள் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ நேற்று இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில், மூன்று நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு ஜப்பான் பெண் மீது உடலில் கைவைத்து வண்ணம் பூசி அத்துமீறுகிறார்கள். மேலும் ஒருவர் அவரது தலையில் முட்டையைக் கொண்டு அடிக்கிறார். இவர்களிடம் இருந்து அப்பெண் தப்பித்து ஓடும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேசிய மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என டெல்லி போலிஸாருக்கு வலியுறுத்தியது.

இந்த வீடியோவை ஆதாரமா வைத்துக் கொண்டு ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய 3 இளைஞர்களை போலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்றும் அவர் வங்காளதேசத்திற்குச் சென்றுவிட்டார் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோலி கொண்டாடப்பட்ட அதேநாளில்தான் மகளிர் தினமும் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தான் ஜப்பான் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

&nb

கருத்துகள் இல்லை: