திங்கள், 3 அக்டோபர், 2022

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய நீண்ட கால கோல்டன்ட் விசா கிரீன் விசா .. முழு விபரம்

BBC News தமிழ்  :  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமல்படுத்தப்பட்ட புதிய விசா கொள்கை: இந்தியர்களுக்கு இதனால் நன்மை ஏற்படுமா?
கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விசா கொள்கையில் அறிவித்த மாற்றங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் குடியேற்றக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விசா விதிகளின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கான நீண்ட கால விசா, தொழில் வல்லுநர்களுக்கு நீண்ட காலம் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கான புதிய கோல்டன் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த மாற்றப்பட்ட விதிகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் ஏராளமான இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 34 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வேலை மற்றும் வணிகத்திற்காக அங்கு சென்றுள்ளனர். க்ரீன் விசாவின் மிகஅதிக பலனை இவர்கள் பெறுவார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொள்கை முடிவுகளில் இது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. நாட்டிற்கு அதிக முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஈர்க்க, இந்தப் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர். புதிய விசா கொள்கையின் சிறப்பம்சங்கள் என்ன, அவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை இப்போது நாம் தெரிந்துகொள்வோம்.
க்ரீன் விசாவின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் ஐந்து ஆண்டுகள் வரை அங்கு தங்கலாம். அதை புதுப்பிக்கவும் செய்யலாம்.

இது சுய ஸ்பான்சர் விசாவாக இருக்கும். அதாவது இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமகன், இங்கு வரும் நபரின் விசாவை ஸ்பான்சர் செய்யத் தேவையில்லை. ஃப்ரீலான்ஸர்கள், சுயதொழில் செய்பவர்கள், திறமையான தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் அல்லது அவர்களது கூட்டாளிகள் இந்த விசாவிற்கு தகுதியுடையவர்கள்.

க்ரீன் விசா வைத்திருப்பவர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் அங்கு தங்கியிருக்கும் காலத்தில் தங்கள் மனைவி அல்லது கணவன், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களை தங்களோடு வைத்துக் கொள்ள முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 25 வயது வரை தங்களுடன் வைத்திருக்க முடியும். முன்பு இந்த வயது 18 ஆக இருந்தது. திருமணமாகாத மகள் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்த வயது வரம்பு பொருந்தாது. க்ரீன் விசா வைத்திருப்பவர், தங்கும் கால முடிவில் கூடுதலாக ஆறு மாத கால அவகாசத்தையும் பெறுவார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலீடு செய்யும் வெளிநாட்டு தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அறிவியல் மற்றும் தொடர்புடைய துறைகளில்

பணிபுரியும் வல்லுநர்கள், மிகவும் திறமையான மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

சிறந்த திறமையாளர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஈர்ப்பதற்காக கோல்டன் விசா திட்டம் 2020 இல் செயல்படுத்தப்பட்டது. கோல்டன் விசா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விசாவின் காலம் பத்து ஆண்டுகள் வரை இருக்கும்.

கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். இதன் கீழ் தனது வணிகத்தில் நூறு சதவிகித உரிமையை ஒருவர் பெறுவார். முன்னதாக, ஆறு மாதங்களுக்கு மேல் நாட்டைவிட்டு வெளியில் வாழ்பவரின் தங்கும் உரிமை ரத்து செய்யப்பட்டு வந்தது. ஆனால் பத்து வருட கோல்டன் விசா திட்டத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோரின் வீட்டு உதவியாளர்களின் எண்ணிக்கைக்கான வரம்பும் நீக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் எந்த வயதுக்குழந்தைகளையும் ஸ்பான்சர் செய்யலாம். கோல்டன் விசா வைத்திருப்பவர் காலமாகிவிட்டாலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் விசா காலம் முடியும் வரை அங்கேயே இருக்க முடியும்.

கோல்டன் விசாவின் கீழ், அறிவியல்-பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வணிகம், நிர்வாகம் மற்றும் கல்வி தொடர்பான துறைகளின் வல்லுநர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக, இதுபோன்ற தொழில் வல்லுநர்கள் அங்கு வசிக்க மாதந்தோறும் 50 ஆயிரம் AED (திர்ஹாம்)க்கு மேல் அதாவது சுமார் 11 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அது 30 ஆயிரம் AED அதாவது 6.6 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு,

துபாயில் வேலைகள் பற்றிய தகவல்களைத் தேடும் நபர்கள்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிறருக்கான விசா கொள்கை
சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்பவர்கள் இப்போது மேலும் 60 நாட்கள் அங்கு தங்கலாம். முன்னதாக இந்த காலம் 30 நாட்களாக இருந்தது.
இது தவிர, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள்வரை அங்கு தங்கலாம் மற்றும் இந்த நேரத்தில் அவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் நாட்டைவிட்டு வெளியே சென்றுவரலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். UAE யின் நகரமான துபாய் ஒரு பெரிய சர்வதேச ஷாப்பிங் இடமாகும்.

வேலைக்காக அங்கு செல்பவர்களுக்கு புதிய விசா கொள்கையின் கீழ், ஸ்பான்சர்கள் அல்லது ஹோஸ்ட்கள் தேவையில்லை. மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ள முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளின் கீழ் வரும் வல்லுநர்கள் மற்றும் உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்களின் புதிய பட்டதாரிகள் வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பெரும் தொகையை தாயகத்திற்கு அனுப்பும் இந்தியர்கள்

இந்தியாவின் 34 லட்சம் பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்கின்றனர். மேலும் இது அங்குள்ள மிகப்பெரிய புலம்பெயர்ந்த சமூகமாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவில் 1700 முதல் 1800 கோடி டாலர்கள் முதலீடு செய்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது. இதில் 1160 கோடி டாலர்கள் நேரடி அன்னிய முதலீட்டின் வடிவில் உள்ளது.

மீதமுள்ளவை போர்ட்ஃபோலியோ முதலீடு ஆகும். இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள ஒன்பதாவது பெரிய நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 8500 கோடி டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. துபாயில் பணிபுரியும் இந்தியர்கள் நாட்டிற்கு 1756 கோடி டாலர்களை அனுப்பியுள்ளனர் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை: