வியாழன், 8 செப்டம்பர், 2022

யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..?

 தேசம். நெட் அருண்மொழி:     யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..? இனச்சுத்திகரிப்பை புலிகளே செய்தனர்.”- முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், \
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.


முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார். அதன் பின்னர் பொலிஸார் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்துக்குச் சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக்கொண்டுள்ளனர்.

இதன்படி தொல்லியல் திணைக்களத்துக்கு அதனைப் பராமரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குருந்தூர் அசோக விகாரை என்பது 2 ஆயிரம் வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்துக்கு அமைய குருந்தூர் மலை உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும். அங்கு அகழ்வுகளின்போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நடந்த சம்பவத்துக்கு வெட்கப்பட வேண்டும்.

இங்கு புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பௌத்த பீடங்களின் நாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதைக் குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பியிருந்தனர்.

இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையைச் செய்தும், பெளத்தர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாகக் கருத வேண்டாம் என்று அன்று நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

அன்று புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களையும் கொலை செய்யும் போதும் கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன. பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டுவந்துள்ளது. இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன. அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார். குருந்தூர் விகாரை பராமரிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விநயமாக அவர்களிடம் கேட்கின்றோம்.

இந்தப் பராமரிப்புப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் நிறுத்தாது முன்னெடுத்துச் செல்லும். அது நிறுத்தப்படாது. இதேவேளை, இந்த நடவடிக்கைகளால் இனச் சுத்திகரிப்பு செயற்பாடு நடக்கும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன. இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர். அங்கு இப்போது எவ்வளவு முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன? உண்மையில் இனச் சுத்திகரிப்பு நடந்திருந்தால் சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்திருக்கும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சரியான பாதைகளைக் காட்டுங்கள், இல்லாவிட்டால் இவர்களை விரட்டியடிங்கள் என்று நான் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: