புதன், 7 செப்டம்பர், 2022

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கலைஞர் செய்திகள்   : தமிழ்நாடு 150 நாட்கள்- 3500 கி.மீ தூரம்.. தேசியக் கொடியை கையில் கொடுத்து ராகுல் பயணத்தைத் தொடங்கி வைத்த முதல்வர்!
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி. இந்த நடை பயணத்திற்காக ராகுல் காந்தி நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் இன்று ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்படர் வழியாக கன்னியாகுமரி வந்தார். பின்னர் திருவள்ளுவர் நினைவிடம், விவேகாந்தனர் நினைவிடங்களைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடை பயணத்தைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி வரவேற்றார். பிறகு இருவரும் காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 600 மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு ராகுல்காந்தி வருகிறார்.

இந்த நடை பயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை மொத்தம் 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார் ராகுல் காந்தி

கருத்துகள் இல்லை: