திங்கள், 5 செப்டம்பர், 2022

அமைச்சர் சிவசங்கர் : தமிழகத்தில்தான் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை இருக்கிறது. இதன் மூலம் ஒரு மெளன புரட்சி நடந்துள்ளது.

tamil.samayam.com  :  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் - ஏ.ஐ.டி.யூ.சியின் 15-ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
"தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் என்றாலே கலைஞர் கருணாநிதி நினைவுக்கு வருவார். அதற்கு காரணம் போக்குவரத்து கழகத்தை அரசுடமையாக்கியவர் அவர் தான்.
அதனால் தான் தமிழ்நாடு சமூக நீதி அடிப்படையில் சமச்சீர் வளர்ச்சி அடைந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் நகர்புற பகுதிகளில் மட்டும் தான் அரசு பேருந்து சேவை இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மெளன புரட்சி நடந்துள்ளது.
கிராமப்புறத்தில் இருப்பவர்கள் நகரத்திற்கு வந்து கல்வி கற்கவும், தொழில் செய்யவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு வந்த புது சிக்கல்.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வட மாநிலங்களில் தமிழ்நாட்டில் இருப்பது போல் பேருந்து வசதி இல்லை. மிக பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 3000 அரசு பேருந்துகள் தான் உள்ளது. டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்து சேவையில் ஒரு போதும் அவர்களை பாதிக்க கூடாது என முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் நாம் கட்டணத்தை உயர்த்தவில்லை.

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இருந்தபோதும் பெண்களுக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டம் பெண்களுக்கு கைக்கொடுக்கும் திட்டம். பெண்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு முன்பு வரை 40 சதவீதம் பெண்கள் தான் பயணத்தார்கள் இப்போது 60 சதவீதத்தை தாண்டி பெண்கள் பயணம் செய்கிறார்கள். இத்திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு நஷ்டம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது தவறு.

பெண்கள் இலவச பயணத்திற்கு ஆகும் செலவை போக்குவரத்து துறையிலிருந்து செலவழிக்கவில்லை மாறாக தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலத்துறை உள்ளிட்ட மற்ற துறைகளிலிருந்து வழங்குகிறார். அதனால் இந்த இலவச பயணத்திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு எந்த நஷ்டமும் இல்லை.
மாறாக அதிக பெண்கள் பயணிப்பதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் படி உயர்ந்துள்ளது.
இத்திட்டத்தால் பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே போல போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 20 சதவீதம் ஆப்செண்ட் ஆனார்கள் அவர்களிடம் சென்று நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதை சிலர் கிண்டலடித்தார்கள் ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கையை குறித்து அவர்கள் உணர்வதில்லை. விழா காலங்களில் கூட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் அவர்கள் கஷ்டத்தை யாரும் கண்டுக்கொள்வதில்லை அவர்களை காக்கும் பொறுப்பும் போக்குவரத்து கழகத்திற்கு உள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் ஒரு கோரிக்கை தவிர மற்ற அனைத்தும் ஒப்புக்கொண்டுள்ளோம். கடந்த ஆட்சி காலத்தில் சீர்குழைக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தம் இந்த ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிக பணம் கொடுக்க வேண்டும் என மனம் இருக்கிறது ஆனால் பணம் இல்லை. இருந்தபோதும் இயன்ற அளவு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.


இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்று கொண்டிருக்கிறார்கள். விமானம் தனியார்மயமாக்கி விட்டார்கள்.
ரயில்வே துறையை பாதி விற்று விட்டார்கள்.
மாநிலங்களில் உள்ள போக்குவரத்து துறையை எப்படியாவது தனியார்மயமாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருகிறது.
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்து கழகத்தை காப்பதில் உறுதியாக இருக்கிறார். தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.
 பல்வேறு செயலிகள் மூலம் ஆட்டோ உள்ளிட்டவற்றில் மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அதெல்லாம் நமக்கு போட்டியாக உள்ளது. அதையும் மீறி போக்குவரத்து கழகத்தை காத்து மக்களுக்கு சேவை அளிப்பதில் உறுதியாக இருக்கிறோம்" இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: