சனி, 29 ஜனவரி, 2022

நடிகர் ராதாரவி மீது பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு!.. டப்பிங் கலைஞர்கள்

 மின்னம்பலம் : நடிகர் சங்கத்தை போலவே டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு நடிகர் ராதாரவி ஆளாகியுள்ளார்.
புகார் குறித்து தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையை தொடர்ந்து, ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்கின்றனர் டப்பிங் கலைஞர்கள்.
சங்க நிர்வாகத்தில் 10 ஆண்டுகளாக வெவ்வேறு பதவிகளை வகித்தவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க பொறுப்பிலும் இருந்த இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
அதேபோல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும், பல கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்படுகிறது.


வரவு, செலவு கணக்கு கேட்பவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது,
சம்பளத்தை கலைஞர்கள் யாரும் நேரடியாக பெறாமல், தான் நியமிக்கும் கமிஷன் தரகர்கள் மூலம் பெறுவது என பல குற்றச்சாட்டுகள் இவர்மீது கூறப்பட்டன.

இந்நிலையில், மூத்த உறுப்பினர்களான மயிலை எஸ்.குமார், சிஜி, மறைந்த காளிதாஸ் ஆகியோரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‛ராதாரவி மீதான நிர்வாகத்தின் மீது வந்துள்ள புகார் அனைத்தையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.

47 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சங்கத்திற்காக நிலம் வாங்கியதில், 50 லட்ச ரூபாய்க்கு மேல் பொய் கணக்கு, 2017 முதல் தொழிலாளர் நலத்துறைக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடி,உறுப்பினர்களின் சம்பளத்தில் மோசடி, கட்டாய கமிஷன்; சந்தாவில் மோசடி, உண்மையான கணக்கு சமர்ப்பிக்காமல் பொய் கணக்கு, கேள்வி கேட்கும் உறுப்பினர்களை நீக்கம் செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர தொழிலாளர் நலத்துறை மனுதாரர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. ராதாரவி மீதான இந்த நடவடிக்கையால் பெப்சி உள்ளிட்ட மற்ற திரைத்துறை அமைப்புகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

அம்பலவாணன்

கருத்துகள் இல்லை: