திங்கள், 24 ஜனவரி, 2022

ஒமைக்ரான் அலை, கொரோனாவுக்கு முடிவு கட்டும் - மருத்துவ நிபுணர் நம்பிக்கை

 தினத்தந்தி : புனே, கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இந்த தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
அதாவது ஒமைக்ரான் அலையால் கொரோனாவே முற்றிலும் முடிவுக்கு வரும் என பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார்.


தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர், இது குறித்து கூறுகையில், ‘ஸ்பானிஷ் காய்ச்சலைப்போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும், 2-வது அலை கொடூரமாகவும் இருந்தது. 2-வது அலைக்கு பின் ஸ்பானிஷ் காய்ச்சல் மிகவும் லேசாக அதாவது சாதாரண ஜலதோஷம் போலவே மாறியது. அதைப்போல கொரோனாவின் 3-வது அலையும் 2-வது அலையை விட லேசாகவும், அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருக்கிறது. இதற்கு பிறகு 4-வது அலை இந்தியாவில் இருக்காது’ என நம்பிக்கை தெரிவித்தார்.

அந்த வகையில், தற்போதைய சான்றுகளை பார்க்கும்போது, இந்த தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு மாறுபாடாகவே ஒமைக்ரான் அலை மாறக்கூடும் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: