செவ்வாய், 25 ஜனவரி, 2022

11 மணிநேரமாக விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் பயணித்த நபர் உயிருடன் மீட்பு

 virakesari.lk/ : நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, சரக்கு விமானம் தரையிறங்கியபோது அதன் முன்பக்க சக்கரத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை விமான நிலைள அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து விமானம் புறப்பட்டதில் இருந்து 11 மணி நேரத்திற்கும் மேலாக அந்த நபர் முன்பக்க சக்கரப் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக ஷிபோல் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த  நபர் தற்போது வரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர் 16-35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான முன்பக்க சக்கரப் பகுதியில், விமான நிலையக் குழுவினர் முதலில் ஒரு நபரைப் போல இருப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த, பொலிசார் மற்றும் அவசர சேவைகள் அந்த நபர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினர், ஆனால் அவர் குறைந்த உடல் வெப்பநிலையுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

“இந்த மனிதனைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம், ஆனால் விமானம் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் 10,000 [கிலோமீட்டர்கள்] பறந்த பிறகு அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்” என்று ராயல் டச்சு இராணுவ காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் ஹெல்மண்ட்ஸ் தெரிவித்தார்.

அந்த நபர் விமான நிலையத்தில் முதலுதவி  வழங்கி நிலைப்படுத்தப்பட்டு பின்னர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என ஹெல்மண்ட்ஸ் மேலும் கூறினார்.

ஜோகன்னஸ்பர்க் மற்றும் ஆம்ஸ்டர்டாம் இடையே சராசரியாக 11 மணிநேரம் ஆகும், மேலும் கென்யாவில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தால், பயணம் பல மணிநேரம் அதிகமாக இருந்திருக்கும் என்று இராணுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: