புதன், 3 நவம்பர், 2021

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்!

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்!

மின்னம்பலம் : வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித் துறை தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கட்டப்படும் அரசுக் கல்லூரிகளின் கட்டுமான பணிகளுக்கு நிதியை விடுவிப்பது, கட்டடப் பணிகளைப் பார்வையிடுவது, ஒப்பந்தம் போடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இந்நிலையில் வேலூர் கோட்டை பொதுப்பணித் துறை தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளராக உள்ள ஷோபனா மீது ஒப்பந்ததாரர்களிடம் அதிக அளவு கமிஷன் பெறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

செயற்பொறியாளர் ஷோபனா ஒப்பந்ததாரர்களிடம் 8 அல்லது 9 சதவிகித அளவுக்கு கமிஷன் வாங்குவார் என்றும் கடந்த இரு தினங்களாக ஒப்பந்ததாரர்களை செல்போனில் அழைத்துத் தொடர்ந்து கமிஷன் கேட்டு வருகிறார் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான போலீசார், ஷோபனாவுக்குத் தொடர்புடைய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு தொரப்பாடி அரியூர் சாலை பகுதியில் அரசு வாகனத்தில் ஷோபனா காத்திருந்தபோது அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பணத்திற்கு ஷோபனா உரிய விளக்கம் அளிக்காத நிலையில் மாவட்ட அலுவல் ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் ஷோபனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஷோபனாவிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் உள்ள அவரது வீட்டிலும் , பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை விடுதியில் ஷோபனா தங்கியுள்ள அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் மொத்தமாக 2.27 கோடி ரூபாய் ரொக்கம், 38 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஷோபனாவுக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும், அவரது வங்கிக் கணக்கை முடக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: