புதன், 3 நவம்பர், 2021

பாமக-வினர் நடத்திய போராட்டத்தில் அரசுப் பேருந்து அடித்து உடைப்பு: ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயம்

 tamil.news18.com : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமகவினர் நடத்திய போராட்டத்தின் போது அரசுப் பேருந்தை கல்வீசி தாக்கியதில் பேருந்து ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். பதற்றம் அதிகரித்துள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோட்டில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரியும் பா.ம.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின்போது உணர்ச்சிவசப்பட்ட பாமக பிரமுகர் ஒருவர் அவ்வழியாக வந்த அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டார்.
இச்சம்பவத்தால் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பெண் என இருவர் படுகாயமடைந்தனர்.
இதனால், பகண்டை கூட்ரோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: