சனி, 6 நவம்பர், 2021

“கொரோனா பரவலை முதன் முதலாக உலகிற்கு சொன்னதால் சிறைக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் கவலைக்கிடம்” : யார் இந்த ‘ஜாங் ஜான்’ ?

“கொரோனா பரவலை முதன் முதலாக உலகிற்கு சொன்ன பெண் பத்திரிக்கையாளர் கவலைக்கிடம்” : யார் இந்த ‘ஜாங் ஜான்’ ?

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார்  : சீனாவில் கொரோனா பரவலை முதன் முதலாக உலகிற்கு சொன்ன பெண் பத்திரிக்கையாளர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பற்றிய தகவலை முதன்முதலில் ஊடங்களில் சொன்னவர் பத்திரிக்கையாளர் ஜாங் ஜான்.


இவர் கொரோனா பரவல் தொடர்பாக கள ஆய்வு நடத்தி பல ஆய்வுக்கட்டுரை, வீடியோ மற்றும் செய்தி உள்ளிட்ட தகவலை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிட்டார். அந்தவகையில் கடந்த 2020ம் ஆண்டு அரசு தடை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது மற்றும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜாங் ஜான் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டு, ஷாங்காய் சிறையில் உள்ள பெண் கைதிகள் வார்ட்டில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கையைக் கண்டித்து சில மாதங்கள் சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் ஜாங் ஜான். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில், மூக்கின் வழியே டியூப் செலுத்தப்பட்டு அவருக்கு உணவு கொடுக்கப்பட்டது. அவர் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தகவல் அறிந்த பலரும் ஜாங் ஜானை விடுதலை செய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பான பிரச்சனையை ஐ.நா வரை கொண்டு செல்லவிருப்பதாக ஜாங் ஜானின் சகோதரர் ஜாங் ஜூ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: