புதன், 3 நவம்பர், 2021

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்

 மாலைமலர் : நீண்ட நாட்கள் ஆய்வுக்குப்பின், கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்
கோவேக்சின் தடுப்பூசி
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் நட்பு முறையில் இந்தியா ஏற்றுமதி செய்தது.


ஆனால், உலக சுகாதார மையம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருந்தது. இதனால் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பல நாடுகள் உலக சுகாதார மையம் அங்கீகரித்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே, நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளன. இதனால் வெளிநாடுகளில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது.

உலக சுகாதார மையம் கேட்ட தரவுகள் அனைத்தையும் பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கியது. ஆனால் ஒப்புதல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியா, கயானா உள்ளிட்ட நாடுகள் கோவேக்சின் செலுத்தியவர்களை அனுமதிக்க ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம், அவசர கால பயன்பட்டிற்காக உபயோகிக்க கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக சுகாதார மையம் பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்- வி, சீனாவின் ஒரு தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: