திங்கள், 1 நவம்பர், 2021

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது : உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு

 மாலைமலர் : வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை:  தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
முதலில் இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பழங்குடியின மக்களுக்கு 1 சதவீதம் என இட ஒதுக்கீடு இருந்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களும் இருந்தனர். ஆனால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.
குறிப்பாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் தீவிர போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு அப்போது இருந்த தி.மு.க. அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப் பிரிவை உருவாக்கியது.


அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 30 சதவீதம் ஆனது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்கள், சீர்மரப்பினர் என பல்வேறு சாதியினரும் இடம் பெற்று இருந்தனர்.
இதன் காரணமாக வன்னியர் சமூகத்தினருக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை. எனவே வன்னியர்களுக்கு என்று தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழுந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நேரத்தில் அ.தி.மு.க. அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு என்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் வன்னியர்களுக்கு தனியாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணை ஜூலை 26-ந்தேதி வெளியிடப்பட்டது.

ஆனால் வன்னியர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மற்ற சமூகத்தினரை பாதிப்பதாக பல்வேறு சமூகங்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

சட்டசபை தேர்தலின் நேரத்தின்போதும் இது எதிரொலித்தது. அப்போது அ.தி.மு.க. தலைவர்கள் இது தற்காலிக இட ஒதுக்கீடுதான் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பிறகு உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தீப்குமார், முத்துக்குமார் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.

அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மாநில ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு நீதிபதிகள் கூறினார்கள்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் பாப்பாரப் பட்டியைச் சேர்ந்த அபிஸ் குமார் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கோடு இதையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறி சந்தீப்குமார், முத்துக்குமார் இருவரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இட ஒதுக்கீடு தொடர்பாக மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் பல வழக்குகளும் தொடரப்பட்டு இருந்தன. அனைத்து வழக்குகளும் மதுரை ஐகோர்ட்டில் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது.

பரமக்குடி பாலமுரளி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்தாவது:-

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்தமாக 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதத்தை வன்னியர் சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டமசோதாவை நிறைவேற்றியது.

இதனால் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எனவே வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை ஐகோர்ட்டில் நாள்தோறும் விசாரித்தனர்.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட் டில் 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு வழங்கி இருப்பது, சட்டத்துக்கு முரணான இட ஒதுக்கீடாக உள்ளது.

சாதி ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற சாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்திவைத்து இருந்தனர்.

இந்தநிலையில் இன்று காலையில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். அதில் கூறிஇருந்ததாவது:-

மிகவும் பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழ்நிலையில் இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கலாமா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதில்கள் ஏற்றுக்கொள்பவையாக இல்லை. இந்த அரசாணை அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது.

எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப்பணிகளில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: