வெள்ளி, 9 ஏப்ரல், 2021

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

வேளச்சேரியில்  மறுவாக்குப்பதிவு?

minnambalam.com: வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்திரா பள்ளி வாக்குச்சாவடி மையத்திலிருந்து விவிபாட் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உரியப் பாதுகாப்பின்றி, இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்வதைப் பார்த்த அவ்வழியாக வந்த தனியார் உணவு டெலிவரி  ஊழியர், அவர்களை வழிமறித்து விசாரித்துள்ளார். போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி எடுத்து செல்கிறீர்கள் என்று அந்த ஊழியர் கேட்கவே, அதற்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சரியாகப் பதில் சொல்லவில்லை. இதற்குள் அவ்விடத்தில் பொதுமக்கள் கூடினர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரையும், அவர்கள் கொண்டு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்களோடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் 3 பேரும் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அல்ல என்றும் பழுதான இரண்டு விவிபாட் இயந்திரங்களும், இரண்டு மாற்று இயந்திரங்களும் தான் என்று தேர்தல் அதிகாரி பிரகாஷ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தில் இந்திரா பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வாசுதேவன் உட்பட நான்கு பேர் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் உத்தரவுப்படி, இதில் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேளச்சேரியில் எடுத்துச்செல்லப்பட்ட இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்தது. இந்தத் தேர்தல் விதிமீறல் தொடர்பாகத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

 

கருத்துகள் இல்லை: