வியாழன், 8 ஏப்ரல், 2021

ஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்தர்களை மாற்றம் ! துரைமுருகன் எதிர்ப்பு!

ஆளுநருக்கு ஏனிந்த அவசரம்? துரைமுருகன் எதிர்ப்பு!

 minnambalam :தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.              தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான இந்த நாட்களில் இரு பல்கலைக் கழக துணைவேந்தர்கள் ஆளுநரால் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து இன்று (ஏப்ரல் 8) திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,    “ஆட்சி மாற்றத்துக்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கியிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது. தேர்தல் முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும்.

ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாத காலம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது தான் மரபு.

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்க போகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

ஆனால், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ். மாதேஸ்வரன், கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார் ஆகியோரை ஆளுநர் அறிவித்ததாக தகவல்கள் வந்திருக்கின்றன.

பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்.

இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது.

தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்க கூடாது என்பதுதான் எமது கேள்வி.

முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக் கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்து காட்டி இருக்கிறது. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்கு கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல” என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: