செவ்வாய், 15 மே, 2018

ராகுல் குமாரசாமியிடம் : பாஜக வரக் கூடாது.. நீங்க எடுக்கும் முயற்சிக்கு நாங்க ஒத்துழைக்கிறோம்.

டிஜிட்டல் திண்ணை:  டெல்லியில் முடிவான டீல்!
மின்னம்பலம் :“கர்நாடகா தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கியிருக்கிறது. காலையில் தேர்தல் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே உற்சாகத்தில் இருந்தது பிஜேபி. ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்... எடியூரப்பா சூப்பர் ஸ்டார் என்று கர்நாடகா பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகத்தில் கோஷங்களும் போட்டனர். வெடியும் போட்டனர். துணை முதல்வர் பன்னீர், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் என எல்லோரும் எடியூரப்பாவுக்கு வாழ்த்தும் சொன்னார்கள். மதியத்தைக் கடந்தபோதுதான் பாஜகவுக்கு முன்னிலை 104 ஆகக் குறைய ஆரம்பித்தது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகிக்க ஆரம்பித்தன.
காலையில் இருந்த நிலவரம் தந்த தெம்பில், ‘மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என பாஜகவின் மத்திய அமைச்சரான சதானந்த கவுடா அறிவித்தார். ஆனால் நிலைமை மாற, மாற யாருடைய ஆதரவும் இல்லாமல், பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று சொல்லி வந்தவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

டெல்லியில் இருந்த பிஜேபி தலைவர்களும் இந்த சூழ்நிலையை எதிர்பார்க்கவே இல்லை. இதற்குள் விறுவிறுவெனக் களத்தில் இறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவிடம் பேசியிருக்கிறார். ‘நாம சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இவ்வளவு நாள் நீங்கதானே முதல்வராக இருந்தீங்க. இந்த முறை எங்களுக்கு விட்டுக் கொடுங்க. எங்களுக்கு ஆதரவு கொடுங்க. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கிறோம்...’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு சித்தராமையாவோ, ‘உங்களை விட நாங்கதான் அதிக இடங்களில் ஜெயிச்சுருக்கோம். அதனால் நீங்க எங்களுக்கு ஆதரவு கொடுங்க. நான் முதல்வராக இருக்கேன். உங்களுக்கு நீங்க சொன்ன மாதிரியே துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க ஏற்பாடு செய்யுறேன்..’ என்று சொன்னாராம். இப்படியே பேச்சு நீண்டாலும் அது ஒரு முடிவுக்கு வரவில்லை.
இனி கர்நாடகாவில் பேசி பிரயோஜனம் இல்லை என முடிவுக்கு வந்த குமாரசாமி, டெல்லியில் உள்ள காங்கிஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவருடன் பேசினாராம். அடுத்த சில நிமிடங்களில் ராகுல் காந்தியே குமாரசாமியை அழைத்துப் பேசியதாகச் சொல்கிறார்கள். சித்தராமையாவிடம் சொன்ன விஷயங்களை அப்படியே ராகுலிடமும் சொல்லியிருக்கிறார் குமாரசாமி. பொறுமையாகக் கேட்ட ராகுல், ‘பிஜேபி வரக் கூடாது என்பதற்காக நீங்க எடுக்கும் இந்த முயற்சிக்கு நாங்க ஒத்துழைக்கிறோம். நீங்க ஆக வேண்டிய காரியத்தில் இறங்குங்க...நான் பேசிக்கிறேன்...’ என ராகுல் சொன்னதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகுதான் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர நேரம் கேட்டுக் கடிதம் கொடுத்தார் குமாரசாமி.
குமாரசாமி ஆளுநரைச் சந்திக்கக் கடிதம் கொடுத்துவிட்டார் என்ற தகவல் பரவியதும், எடியூரப்பா டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டார். டெல்லியில் உள்ள நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசியபடியே இருந்தார். அவர்கள் கொடுத்த ஐடியாவின்படிதான் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகாமல் கர்நாடக அரசியலில் திக் திக் நிமிடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன. கர்நாடகாவை விட்டுவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்றே தெரிகிறது. இதற்காக எந்த ரிஸ்கையும் எடுப்பதற்கு தயாராகிவிட்டது பாஜக. தேர்தல் சமயத்திலேயே கர்நாடகாவில் அதிகம் பணம் புழங்குகிறது என்று பேசப்பட்டது. இனி புழங்கப் போகும் பணம் மலைக்க வைப்பதாக இருக்கும்!”

கருத்துகள் இல்லை: