வியாழன், 17 மே, 2018

நிர்மலா தேவி... சிபிஐ விசாரணை தேவையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

tamilthehindu : மாணவிகளிடம் தவறாகப் பேசியதாக கைதான பேராசிரியை நிர்மலா தேவி
விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
மாணவிகளிடம் தவறாக பாலியல் ரீதியாக பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் அமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவும் தனது விசாரணையை முடித்து அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை, நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ நிர்மலா தேவி மீது ஆள்கடத்தல் பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
ஒரே சம்பவத்துக்காக பல விசாரணை நடத்தினால் அதன்மூலம் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க நேரிடும். எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு அமைப்பு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதில் நீதிமன்றம் தேவையின்றி தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. விசாரணை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில் அந்த விசாரணை சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி ஏற்கெனவே கணேசன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கில் வேண்டுமென்றால் மனுதாரர் தன்னையும் இணைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
  1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.
  2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  3. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
  4. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  5. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
  6. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: