புதன், 16 மே, 2018

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு சம்மதம்!

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு சம்மதம்! மின்னம்பலம் :காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான திட்டத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.
திட்டம் குறித்து விவாதம் எழுந்தபோது, “வாரியமா, குழுவா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யட்டும்” என்று வேணுகோபால் தெரிவித்தார்.
தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, “இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் உங்கள் (நீதிபதிகள்) முன்னிலையிலே எடுக்கப்பட வேண்டும். பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை அது ஒத்திருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் (மாநிலங்கள்) ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
எனினும், மத்திய அரசின் வரைவுத் திட்டம் சரியா, தவறா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யாது என்று தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திருக்கிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஆய்வு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, வழக்கு மே 16ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது..
வரைவுத் திட்டத்தின் நகல் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான ஷியாம் திவான், கர்நாடகாவில் இன்னும் நிலையான அரசு அமையவில்லை; எனவே வழக்கை ஜூலை முதல் வாரத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்குத் தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அல்லாமல், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசாங்கம் காலியாக உள்ளது என்ற வார்த்தையே கிடையாது. அரசுகள் மாறிக்கொண்டிருக்கும். ஆனால் அரசாங்கம் நிலையானது. எனவே இந்த வழக்கை ஒத்திவைக்கக் கூடாது” என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும், வரைவுத் திட்டத்தை செயல்படுத்தப்போவது மத்திய அரசுதான் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதைத் தொடர்ந்து வாதாடிய சேகர் நாப்தே, மேலாண்மை வாரியத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று கூறினார். இதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும், மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்குவதற்கும் மத்திய அரசு இசைவு தெரிவித்தது.
மேலாண்மை வாரியத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்களை மத்திய அரசு தலையிட்டு தீர்த்துவைக்கும் என்று வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் புதுச்சேரி யூனியன் பிரதேசம் கண்டனம் தெரிவித்தது. புதுச்சேரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எஸ். நம்பியார், “ இந்தத் திட்டம் நீண்ட காலத்துக்கானது என்பதால் மத்திய அரசு இதில் தலையிடக்கூடாது என்று வாதிட்டார். மத்திய அரசு தலையிடக்கூடாது என்றால் வேறு யார் முடிவெடுப்பது என்று வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அப்போது,
தமிழக அரசின் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, வாரியம் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் எந்த வேலையும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம்தான் இறுதி முடிவு எடுக்கக்கூடிய கட்டமைப்பு என்று தெரிவித்தது.
கேரளா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, அணைகள் என்பது மாநிலத்துக்கு உரிமையானது. இந்த விவகாரத்தில் வாரியம் தீர்மானிக்கும் என்பது மாநிலத்தின் உரிமையில் தலையிடுவதாகும்” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “மாநிலத்துக்கு இடையே பாயும் நதி என்பது தேசத்தின் சொத்து என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்” என்று அவருக்கு விளக்கமளித்தனர்.
இந்த வழக்கு நாளை (மே 17) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவும் அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: