சனி, 19 மே, 2018

ஸ்டாலினிடம் கனிமொழி புகார்!


டிஜிட்டல் திண்ணை:  ஸ்டாலினிடம் கனிமொழி புகார்!. மின்னம்பலம்: திமுக செயல் தலைவரான ஸ்டாலின் இன்று புதுவை மாநில நிர்வாகிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக திமுகவின் சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, கழக இலக்கிய அணி, தொண்டர் அணி என எல்லோரையும் சந்தித்தார். இந்த அணி நிர்வாகிகள் எல்லோருமே ஸ்டாலினிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்களாம். தொண்டர் அணிக்கு மாநிலச் செயலாளராக இருப்பவர் மாசிலாமணி. அவர் ஸ்டாலினிடம் நேரடியாகவே சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.
‘தொண்டர் அணியில் இருக்கும் யாரும் உற்சாகமாகவே இல்லை. உங்கள் பயணத்தில் முன்பெல்லாம் தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள்தான் பாதுகாப்புக்கு வருவோம். இப்போது யார் யாரோ புதுப் புது ஆட்கள் வருகிறார்கள். நமக்கு நாமே பயணமாகட்டும், இப்போது காவிரிக்காக நீங்கள் நடந்த நடை பயணமாகட்டும், எங்களைச் சேர்க்கவே இல்லை. புது ஆட்களுக்கு கிட்டதட்ட 400 பேருக்கு நீங்க நடைபயணத்தின்போது டிரஸ் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அந்த ஆளுங்க எல்லாம் இப்போ எங்கே இருக்காங்கன்னு கேட்டால் யாருக்கும் தெரியாது.
எல்லோரும் டிரஸ்ஸை மட்டும் வாங்கிட்டு அப்படியே கிளம்பிட்டாங்க. அதேபோல நம்ம தொண்டர் அணி நிர்வாகிகள் எல்லோரும் வருத்தப்படும் இன்னொரு விஷயம் யூனிபார்ம்தான். அது கருப்பு சிவப்புன்னு நம்ம கட்சிக் கொடி கலராக இருந்தாலும் ஏதோ டிரம்ஸ் வாசிக்கிறவங்க போடுற டிரஸ் மாதிரி இருக்கு. அதையும் மாத்தணும்’ என்று சொல்லும்போது ஸ்டாலின் சிரித்துவிட்டாராம்.
இது ஒருபக்கம் இருக்க, கனிமொழியும் ஸ்டாலினிடம் சில புகார்களைச் சொல்லியிருக்கிறார். ‘வெளியூர்களுக்குச் செல்லும்போது மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் வந்து சந்திப்பதே இல்லை. கேட்டாலும் உரிய விளக்கம் அவர்கள் தருவதில்லை!’ என்பதுதான் கனிமொழி சொன்ன புகாராம். ‘அப்படி யாரு இருந்தாலும் அவங்க மேல தாராளமாக நடவடிக்கை எடுங்க...’ என கனிமொழிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம் ஸ்டாலின்!”

கருத்துகள் இல்லை: