வெள்ளி, 18 மே, 2018

பெண் வணிகர்களை தெருவுக்கு துரத்திய பணமதிப்பழிப்பு!

பெண் வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு!மின்னம்பலம்: பெண் வணிகர்களில் 70 விழுக்காட்டினரின் பொருட்களுக்கான தேவையில் எந்த மாற்றமும் ஏற்படாத போதிலும், அவர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய சுய தொழில் மகளிர் அகாடமி நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெண் வணிகர்களின் வருவாய் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பெண் வணிகர்கள் தங்களது சரக்குகளை விற்பனை செய்யக் கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பணமதிப்பழிப்புக்குப் பின்னர் தங்களது வருவாய் சரிந்துள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்ற 68 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது 50 விழுக்காட்டினரிடம் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நடத்திய குழுவைச் சார்ந்த ஜெய்ஸ்ரீ பன்சால் ’டிஎன்ஏ இந்தியா’ ஊடகத்திடம் பேசுகையில், “குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளிலேயே பெரும்பாலான பெண்கள் வருவாய் ஈட்டி வந்தனர். நீண்டகாலமாகப் பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வணிகர்கள் போன்றவர்கள் கடனுக்குப் பொருட்களை வழங்குகின்றனர். தேவையில் எந்த மாற்றமும் இல்லாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: