வெள்ளி, 18 மே, 2018

காவிரி: வாரியமல்ல ஆணையம்... மீண்டும் வேதாளம்

காவிரி: வாரியமல்ல ஆணையம்மின்னம்பலம் :காவிரி நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ளும் அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், இன்று(மே 17) தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் என்றே குறிப்பிட்டுள்ளது.
காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று(மே 16) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திட்டத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் அமைக்க வேண்டும், நதி நீர் பங்கீட்டில் வாரியம் மட்டுமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதற்கு மத்திய அரசும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து இன்று(மே 17) திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் இன்று தாக்கல் செய்தார். திட்டத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாக்கல் செய்யப்பட்ட வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்றும் கர்நாடக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் மீதான வழக்கில் நாளை மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், நாளைத் தீர்ப்பு வழங்காவிட்டால் 22, 23ம் தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: