திங்கள், 9 அக்டோபர், 2017

அப்போலோ ரெட்டியும் ஒருநாள் "நான் பொய் சொன்னேன்' என்பார்?

நக்கீரன் : ""ஜெ. அப்பல்லோவில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று சசிகலா சொன்னதால் நாங்கள் பொய் சொன்னோம்'' என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது ஜெ.வின் மருத்துவ சிகிச்சையின் போது அவரை "கஸ்டடி'யில் வைத்திருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.>ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு நேரெதிரான விஷயங்களை திண்டுக்கல் சீனிவாசன் இப்போது பேசுகிறார். ""அவர் இப்படி பேசுவதை நிறுத்த சொல்லுங்கள்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனையும் தொடர்பு கொண்டு சொல்லப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரம் நம்மிடம் தெரிவிக்கின்றது.<>திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு நம் அனைவரையும் சிக்கலுக்குள்ளாகி விடும் என்கிற பதட்டம் அப்பல்லோ நிர்வாகத்திடம் மட்டுமல்ல, ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், தமிழக சுகாதாரத்துறை, முதல்வர் அலுவலகம் என அனைத்து மட்டத்திலும் காணப்படுகிறது. மார்ச் 6-ந்தேதி தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்... ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.


அதில், ""அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் பலனாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. முதல்வர் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் பல முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தார். அதில் ஒன்று காவேரி விவகாரம். அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. பிறகு அவரது உடல்நிலை சீரானது. அவர் வாய்வழியாக உணவுகளை சாப்பிட்டார். அதன் அடிப்படையில் அவரை அவசர வார்டிலிருந்து பல வசதிகள் உள்ள மற்றொரு வார்டுக்கு மாற்றினோம். முதல்வரின் மரணத்தைப் பற்றி பல கருத்துகள் கூறப்படுவதால், முதல்வரின் சிகிச்சை பற்றிய விவரங்களை இந்தியாவில் கடைப்பிடிக்கும் மருத்துவ சட்டங்கள் மற்றும் நடைமுறைப்படி தெரிவிக்க வேண்டிய விவரங்களை தெரிவிக்கிறோம்'' என சுகாதாரத்துறைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கையுடன்... ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகளின் அறிக்கையும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையும் ஜெ.வின் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்டது. இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த அறிக்கையில் "முதல்வர் சுயநினைவுடன் இருக்கிறார். அவர் நாற்காலியில் 20 நிமிடம் உட்காருகிறார். அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பதால் அவரால் நிற்க முடியவில்லை' என குறிப்பிடுகிறார்கள். அப்போது அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட ஜெ.வின் முழு மருத்துவ சிகிச்சை தொடர்பான அறிக்கையிலும் "ஜெ. நாற்காலியில் உட்கார்ந்தார், திரவ உணவுகளை சாப்பிட்டார், சைகை காட்டினார், அதிகாரிகளிடம் பேசினார், டி.வி. பார்த்தார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. இதுபற்றி அப்பல்லோ மருத்துவர்களிடம் பேசினோம். அவர்கள், தற்போதைய சூழ்நிலையில் புதிய தகவல்களை பகிர்ந்தார்கள். ""செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு 11.15 மணிக்கு ஜெ.வை அப்பல்லோவில் அனுமதித்தார்கள். அவர் சுயநினைவில்லாமல்தான் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 27-ம் தேதி டெல்லியில் காவிரி தொடர்பாக கர்நாடக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதை முடித்துவிட்டு செப்டம்பர் 28-ம் தேதி வந்து ஜெ.வை சந்தித்ததாக சுகாதாரத்துறைச் செயலாளர் கூறிய அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.

அந்த செப்டம்பர் 28-ம் தேதியன்று ஜெ. கடுமையான மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவருக்கு சுயநினைவு சரியாக இல்லை. அதுவரை அவருக்கு வழக்கமான முறையில்தான் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இருந்த ஆஸ்துமா நோயால் ஜெ. கடுமையாக அவதிப்பட்டதால், அவரது நுரையீரலுடன் ஆக்சிஜன் குழாய்கள் இணைக்கப்பட்டு வென்டிலேட்டரில் பொருத்தப்பட்டார். இதை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சுகாதாரத்துறைச் செயலாளர் அறிக்கையுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையே சுட்டிக் காட்டுகிறது'' என்கிறார்கள்.

""ஜெ.வுக்கு தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் செப்டம்பர் 28-ம் தேதியன்று ஜெ.வின் நுரையீரலுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்ட சுவாசக்குழாய் அக்டோபர் மாதம் 7-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டது. செப்டம்பர் 28-ம் தேதியன்று ஜெ.வுக்கு நினைவு சரியாக வராமல் போனது. அவ்வப்போது கண்விழித்து பார்த்தார். அந்த நிலையில் இருக்கும் ஜெ., தலைமைச் செயலாளரிடம் எப்படி காவேரி பற்றி பேசியிருக்க முடியும்'' என கேள்வி கேட்கும் மருத்துவர்கள் இன்னொரு தகவலையும் பதிவு செய்தார்கள்.

""நுரையீரலோடு ஆக்சிஜன் குழாய்களை இணைக்கும் "ட்ராக்கியோஸ்டமி' சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு முழுமையான சுயநினைவு திரும்பவில்லை. அவர் இறக்கும்வரை இதுதான் நிலை'' என்றனர்.


இந்நிலையில் இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்குவதற்கான விண்ணப்ப படிவத்தில் கைரேகையை ஜெ. பதிவு செய்தபோது ஜெ.வின் சுயநினைவு எப்படியிருந்தது எனக் கேட்டோம்.

""அப்போதும் சரி, நவ.12-ஆம் தேதி ஜெ.வின் கையெழுத்துடன் வந்த அறிக்கையின் போதும் சரி, ஜெ. சுயநினைவுடன் இல்லை. ஊடகங்களில் அக்டோபர் 10-ம் தேதி வாக்கில் ஜெ. வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார், ஆங்கிலத்தில் பேசினார் என செய்திகள் வெளியானது. அனைத்தும் பொய்'' என்கிறார்கள்  அப்பல்லோ மருத்துவர்கள்.

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி ஒப்புதல் வாக்குமூலம் குறித்துப் பேசும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தினர், ""நாங்கள் ஜெ.வுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றி மாநில கவர்னர், அப்போதைய மூத்த மந்திரிகள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்குத் தெரியப்படுத்தினோம். மத்திய சுகாதாரத் துறைக்கும் தெரியப்படுத்தினோம். அத்துடன் சசிகலாவுக்கும் தெரிவித்தோம். இப்போது சசிகலா மேல் பழிசுமத்த எங்கள் மேலும் சேறு வாரிப் பூசுவது சரியல்ல'' என்றார்கள்.

இதுபற்றிப் பேசும் சசிகலாவின் வட்டாரம், ""ஜெ.வை கொன்றதாகப் பழி எங்கள் மீது விழும் என்பது தெரியும். ஆனால் நாங்கள் எங்களது செல்போன் மூலம் ஜெ.வின் சிகிச்சையில் நடந்த விஷயங்களை வீடியோக்களாக எடுத்து வைத்துள்ளோம். அதை டி.டி.வி. தினகரன் சார்பில் கூட்டப்படும் பொதுக்குழுவில் காட்ட திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார்கள். அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என கேட்டோம்.

""ஜெ. சுயநினைவை இழந்துதான் மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சையின்போது அவருக்கு சுயநினைவு திரும்பிவிட்டது. அவர் மருத்துவமனையில் டாக்டர்களுடனும், நர்ஸ்களுடனும் உரையாடினார். பிறகு மீண்டும் அவரது உடல்நிலை சீரியஸாக மாறியது. செப்டம்பர் 22-ஆம் தேதியிலிருந்து ஒருவாரம் கழித்து அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அதுவரை ஜெ.வின் ரூமிற்கு சென்றுவந்த சசியை மருத்துவர்கள் அதன்பிறகு அனுமதிக்க மறுத்தார்கள். அதைத்தான் தினகரன் அக்டோபர் 1 முதல் சசி ஜெ.வை சந்திக்கவில்லை என்று பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகும் ஜெ.வை சசி பார்த்தார், உடல் அசைவற்று ஏகப்பட்ட மருத்துவ உபகரணங்கள் செருகப்பட்ட நிலையில் படுத்திருந்த ஜெ.வால் சசியிடம் பேசவே முடியவில்லை. இதையெல்லாம் வீடியோ காட்சிகளாக சசிகலா தனது பெர்சனல் செல்போனில் பதிவு செய்திருக்கிறார். திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் மற்றும் டி.டி.வி. தினகரனிடம் அந்தப் பதிவுகளை சசிகலா கொடுத்து வைத்துள்ளார். சசியின் அனுமதியின்றி அது வெளியே வராது, அதுதான் ஜெ.வுக்கும் சசிக்குமிடையேயான நட்பின் கற்பு'' என்கிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள்.

ஜெ. சிகிச்சையில் இருக்கும்போது நைட்டி உடை அணிந்திருந்தார். வழக்கமாக இருப்பதைவிட ஜெ. மெலிந்து காணப்பட்டார். அதனால்தான் ஜெ.வின் சிகிச்சை குறித்த வீடியோக்களை வெளியிடவில்லை என்கிறார் டி.டி.வி.தினகரன். (1989-ல் சிகிச்சை பெற்ற ஜெ. நைட்டி அணிந்தபடி அதனை படமெடுக்க அனுமதித்தார்). உடல் இளைத்திருந்ததாக தினகரன் சொல்லும் நிலையில், மரணமடைந்தபின் ஜெ.வின் உடல் பழைய தோற்றத்திலேயே இருந்ததன் "எம்பார்மிங்' ரகசியங்களும் சர்ச்சைக்கு விதை தூவுகின்றன.

""சசிகலாவிடம் வீடியோ இருக்கலாம், ஆனால் ஜெ. எங்கள் மருத்துவமனையில் நோயாளியாக இருந்தார். அவர் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தையும் நாங்களும் பதிவு செய்து வைத்துள்ளோம். மருந்து, மாத்திரை, எக்ஸ்-ரே,  ஸ்கேன் என நிறைய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன'' என்கிறது அப்பல்லோ.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஜெ.வால் சசிகலாவை நெருங்க முடியவில்லை என்கிறார் டி.டி.வி. தினகரன். அக்டோபர் 7-ம் தேதி ட்ராக்கோஸ்டமி என்கிற  செயற்கை சுவாசக் கருவி இணைப்புக்குப் பிறகு ஜெ.வுக்கு சுயநினைவு  முழுமையாக இல்லை என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள். ஆனால் அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டி, ஜெ. இறப்பதற்கு சில நாட்கள் முன்புவரை, "ஜெ. பரிபூரணமாக குணமடைந்துவிட்டார். அவர் எப்போது விரும்பினாலும் வீட்டுக்குச் செல்லலாம்' என எப்படிச் சொன்னார். திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதுபோல் ரெட்டியும் ஒருநாள் "நான் பொய் சொன்னேன்' என பல்டி அடிப்பாரோ  என சீரியஸாகவே கேட்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

-தாமோதரன் பிரகாஷ்

கருத்துகள் இல்லை: