புதன், 11 அக்டோபர், 2017

சட்டம் மீறிய சாமானியன் ... சலூட் அடித்த போலீஸ் !

வாகன ஓட்டியைக் கையெடுத்துக் கும்பிட்ட காவல்துறை அதிகாரி!
மின்னம்பலம் :குடும்பத்தோடு இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கையெடுத்து கும்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் வாகன ஓட்டி ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஐதராபாத் அருகில் உள்ள ஆனந்த்பூர் மாவட்டத்தில் மடகாசிரா பகுதியில் உள்ள சாலையில் செல்கிறார். அதில் தனது இரண்டு மகன்களை பெட்ரோல் டேங்க் மீது உட்காரவைத்தும், மனைவி மற்றும் உறவினர் ஒருவரை தனக்குப் பின்னால் அமரச் செய்தும் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்.

அப்போது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த காவல்துறை ஆய்வாளர் ஷிப் குமார் என்பவர் வாகன ஓட்டியை நிறுத்திக் கையெடுத்து கும்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போதுதான் நான் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வந்தேன். இவர்களைப் பார்த்ததும் என்ன செய்வது எனத் தெரியாமல் கைகளைக் கூப்பினேன். இதுகுறித்து அந்த வாகன ஓட்டியிடம் எடுத்துக் கூறியபோது அவர் சிரித்துகொண்டு சென்றார். மேலும் அவர் ஹெல்மெட்டும் அணியவில்லை” எனக் கூறினார்.
காவல்துறையினர் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தாலும், தலைக்கவசம் உயிர் கவசம் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதி இருந்தாலும் பெரும்பாலோனோர் அதைப் பின்பற்றுவதில்லை என்பதுதான் உண்மை.

கருத்துகள் இல்லை: