திங்கள், 24 ஏப்ரல், 2017

மோடி அரசுக்கு பாடை கட்டு ! எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு !

நடிகர், நடிகைகளையும், வெளிநாட்டு தலைவர்கள் சுற்றுலா வந்தாலும் உடனடியாக சென்று பார்க்கும் மோடிக்கு, நமது விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா?
டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக 35 நாட்களுக்கும் மேலாகவும் பல்வேறு வழிகளில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரை நிர்வாணமாய் தொடங்கி, முழு நிர்வாணமும் ஆனார்கள், விவசாயிகள். ஆனால் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தனக்கு வக்கில்லை என அம்மணமாய் நின்றது மத்திய மாநில அரசுகள். விவசாயிகள் போராட்டமானது அனைவருக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்த சென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை அணுகினர்.

பகுதிமக்களும் புமாஇமு தோழர்களும் ஒன்றிணைந்து 19/04/17 அன்று மாலை  மதுரவாயல் ரேஷன்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நொளம்பூர் பகுதி செயலாளர் தோழர் கணேசன் தலைமையில் சுமார் 70 பேர் விவசாயிகளின் கதறலுக்கு பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தி அவமதித்து வரும் மோடி அரசுக்கு பாடைகட்டு! டாஸ்மாக்-கை முட வக்கில்லாத எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு ! என்கிற தலைப்பில் போராட்டத்தை தொடங்கினர்.
சிறுவர்கள் செங்கொடியுடன் முழக்கமிட்டவாறு அணிவகுக்க, மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து நொளம்பூர் தொடங்கி மதுரவாயல் பேருந்து நிறுத்தம் வரை சென்றனர். போராட்டத்தை மக்களுக்கு தெரியா வண்ணம் தடுப்பரண்களை அமைத்து, மறைத்து நின்றது போலீசு. உடனே சுதாரித்துகொண்டதோழர்களும் பொதுமக்களும் பேருந்து நிறுத்தத்திற்கு நேரடியாக சென்றனர். இதை எதிர்பார்க்காத போலீசார் போராட்டத் தலைவரான தோழர் கணேசனிடம் வந்து கெஞ்சி நின்றது. முழக்கமிட்டவாறு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மோடியின் உருவபொம்மைக்கு ஊர் பெண்கள் செருப்பு மாலை அணிவித்தார்கள். உடனே அரசின் விசுவாசமிக்க ஏவல் படையான போலீசு, பதறியடித்துக் கொண்டு வந்து, தயவுசெய்து அத மட்டும் கீழ போடுங்க என்று கெஞ்சியது.
பின்பு புமாஇமு சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி பத்திரிகைகளிடம் பேசிய போது நடிகர், நடிகைகளையும், வெளிநாட்டு தலைவர்கள் சுற்றுலா வந்தாலும் உடனடியாக சென்று பார்க்கும் மோடிக்கு, நமது விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா? 35 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையில் போராடுவதை பார்த்தும் துளியும் மதிக்காத மத்திய அரசுக்கு பாடைகட்டுவதை தவிர வேறு வழியில்லை, இன்னொரு புறம் ஊர் தாலி அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வக்கில்லாத எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டவேண்டும் என நேர்காணல் அளித்தார்.  vinavu.

கருத்துகள் இல்லை: