வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தினகரனுக்கு 50 கோடி கொடுத்த திருச்சி தொழிலதிபர் .. வேட்டையாடும் டெல்லி போலீஸ் ..

இரட்டை இலை சின்னத்தை பெற தினகரனுக்கு ரூ.50 கோடி தொகையை கொடுக்க முன் வந்தது திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று டெல்லி போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
By: Lakshmi Priya சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற தினகரனுக்கு ரூ.50 கோடி தொகையை வழங்க முன் வந்தது திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று டெல்லி போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரை தூக்கவும் டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 5 போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதித்தார். அதன்படி சுகேஷிடம் கைப்பற்றப்பட்ட ரூ.1.30 கோடி பணத்தை ஹவாலா கும்பல் மூலம் கைமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்த டிடிவி தினகரன், நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோருடன் டெல்லி போலீஸார் சென்னைக்கு நேற்று வந்தனர்.

பெசன்ட்நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட தினகரனிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

 அதன்பின்னர் அவர் அங்கிருந்து பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மல்லிகார்ஜூனா என்ற மல்லியுடன் அழைத்து செனறனர். அங்கு தினகரன், மனைவி அனுராதா, மல்லி ஆகியோரிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து அண்ணா நகரில் உள்ள மல்லியின் வீட்டிலும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் தமிழகத்தில் தினகரன் எங்கெங்கு அடிக்கடி செல்வாரோ அங்கெல்லாம் போலீஸார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தினகரனின் நெருங்கிய தோழி லைனா திருவல்லிக்கேணியில் இருக்கிறாராம். அவரது வீட்டிலும் கூட டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
 
 இந்நிலையில் இந்த வழக்கில் தினகரனுக்கு ரூ.50 கோடி கொடுக்க முன்வந்த திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் குறித்த ரகசிய தகவல்களை போலீஸார் சேகரித்து வைத்துள்ளனர். இந்த வழக்கில் சுகேஷும், தினகரனும் பேரம் குறித்து பேசிய ஆடியோ பதிவுகள் இருந்தாலும் அதை உறுதிப்படுத்த திருச்சி தொழிலதிபரை பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஹவாலா மூலம் டெல்லிக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு முன்னர் தினகரனுக்கு பதிலாக இந்த தொழிலதிபர் பணத்தை ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்ததால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் கருதப்படுகிறார். மேலும் இதில் பல்வேறு தமிழக அமைச்சர்களும் சிக்குவர் என்று தெரிகிறது. <  tamiloneindia

கருத்துகள் இல்லை: