சனி, 29 ஏப்ரல், 2017

பிளாஸ்டிக் முட்டை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிளாஸ்டிக் முட்டை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
மின்னம்பலம் : உலகளவில், அனைத்து மக்களும் ஊட்டச்சத்துகளுக்காகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முட்டையை அதிகளவு உண்ணத் தொடங்கியுள்ளனர். ஆனால் சமீபகாலமாக உணவு கலப்படம் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்குமுன் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை மற்றும் முட்டைகோஸ் உள்ளிட்டவை தயாரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சந்த் ஜெயின் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பெருநகரங்களில்தான் கலப்பட பொருட்களின் புழக்கம் அதிகளவில் உள்ளன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து பொருட்களின் தரத்தைக் கண்டறிய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி அனு மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மனுமீதான அடுத்த விசாரணை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலி முட்டைகள் கோழி முட்டைகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுக்கு பதில் ஸ்டார்ச், ரெசின், சோடியம், ஆல்கனேட் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் கருவுக்கு பதில் ஆர்கானிக் அமிலம், பொட்டாசியம், ஜெலட்டின், கால்சியம் குளோரைடு, பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகின்றன. முட்டையின் நிறத்தைப் பெற செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உண்மையான முட்டையையும் போலி முட்டையையும் பொதுமக்கள் கண்டுபிடிக்க முடியாதவண்ணம், முட்டையின் ஓடு அச்சுகள் மூலம் தயாரித்து, அதன் மீது கோழியின் கழிவுகளைப் பூசி விற்பனை செய்கின்றனர். இந்த முட்டைகளை உட்கொள்ளும்போது உடல் நிலை பாதிக்கப்படுவதோடு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும். எனவே, போலியான பிளாஸ்டிக் முட்டைகளை உணவு பாதுகாப்புத் துறையும், மத்திய அரசும் கண்காணித்து அதன் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: