திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி.. BBC.Com
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக்
கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின்
ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை
ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது.
அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்)
சமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு
100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும்.
மாகாணங்களுக்குக்
குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அமைத்த
நீதிக்கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கும்
முதல் இடஒதுக்கீடு ஆணையை 1921இல் பிறப்பித்தது. 1927முதல்1947 வரை
இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்பட்டது.
ஆளுமைமிக்க ஐசிஎஸ் அலுவலர்
கே.பி.எஸ்.மேனன் எழுதிய "இந்தியா:நேற்று-இன்று-நாளை" என்ற நூலில்
நீதிக்கட்சியின் தலைவர்களின் பிராமணரல்லாத சமூகச் சிந்தனையை உணர்ந்த அன்றைய
பெரும்பான்மையான பிராமண உயர் அலுவலர்கள் , தங்கள் பெயரோடு இணைத்திருந்த
அய்யர், அய்யங்கார் பெயர்களை அரசாணைகள் வழியாக நீக்கிவிட்டனர், என்றார்.
இந்த இடஒதுக்கீட்டு ஆணையை 1950இல் பிராமணரான சம்பகம் ராஜன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டது.
பெரியார்,
அண்ணா, காமராசர் உள்ளிட்ட அனைவரும் போர்க் கோலம் பூண்டதால், இந்திய
அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டு இடஒதுக்கீடு கொள்கை மீண்டும்
உறுதி செய்யப்பட்டது. 1990இல் வி.பி.சிங் ஆட்சியில் கொண்டு வந்த 27
விழுக்காடு இடஒதுக்கீடு ஆணை இன்று மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில்
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இடம் பெற வாய்ப்பு அளித்துள்ளது. இது திராவிட
இயக்கத்தின் வெற்றியல்லவா?
மொழி, இன உரிமைகள், பகுத்தறிவு ஆகிய
நோக்கங்களுடன் 1944இல் பெரியார் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகமும்,
1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும்- மொழி,
கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப்
புரட்சிக்கு வித்திட்டதை யார் மறுக்கமுடியும்?
1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக.
பின்னர்,
1967இல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த அண்ணா, சென்னை மாநிலத்திற்குத்
தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், பள்ளிகளில் இந்தி மொழியை அகற்றி தமிழ்,
ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் ஏற்பு, ஒரு ரூபாய்க்குப் படி அரிசித் திட்டம்,
அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம், சுயமரியாதை திருமணச் சட்டம்,
சென்னையில் ஏழைகளுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், கல்லூரி வரை இலவசக்கல்வி
எனப் பல முற்போக்கான சட்டங்களும், திட்டங்களும் நிறைவேற்றினார்.
அண்ணா
தொடங்கிய சமூக நலத் திட்டங்களை ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரும்,
மும்முறை முதல்வராயிருந்த எம்ஜி.இராமச்சந்திரனும், ஐந்து முறை
முதல்வராயிருந்த ஜெயலலிதாவும் மென்மேலும் வலிமைப்படுத்தினர்.
அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக் கொள்கைகள் இன்று இந்திய அரசியலில் முதன்மையாகக் கருதப்படுவதற்கு திராவிட இயக்க ஆட்சிதான் காரணம்.
1969ஆண்டிலேயே
முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு மத்திய-மாநில உரிமைகளை
ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, பரிந்துரைகளைப்
பெற்று, மத்திய அரசிற்கு அனுப்பியது திராவிட இயக்க ஆட்சியின்
ஆக்கப்பூர்வமான செயல்பாடாகும்.
அதிகாரங்கள் குறைவு, ஆனாலும் திட்டங்களுக்குக் குறைவில்லை
1983இல்
இந்திராகாந்தி ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழு, "அளவுக்கு
மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசிற்கு இரத்தக் கொதிப்பும் மாநில
அரசுகளுக்கு இரத்தசோகையும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இதன் விளைவு-
திறமையின்மையும், நோயும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளன. உண்மையில் அதிகாரக்
குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீமைகளைப்
பெருக்கியுள்ளது" என்று கூறியது.
2000இல் வாஜ்பாய்
ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாச்சலய்யா அரசமைப்புச் சட்டத்திருத்தக்
குழுவின் பரிந்துரையில்(2003இல்) "வலிமையான ஒரு மத்திய அரசம், வலிமையான
மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது, இரண்டுமே வலிமையாக அமைய
வேண்டும், இன்றைக்குக் காணப்படுகிற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம்
அதிகாரக் குவியலும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே" எனச் சுட்டிக்
காட்டியது.
இந்த அரசமைப்புச்சட்டம் வழியாக குறைந்த, குறைக்கப்பட்டு
வருகிற மாநில அதிகார எல்லைக்குள்ளிருந்து திராவிட இயக்கம் சமூகப்
பொருளாதாரத் துறைகளில் பல எடுத்துக்காட்டான திட்டங்களைச் சிறப்பாக
நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிகாரம்
அளிக்கும் வகையிலும் உண்மையான கூட்டாட்சியியல் மக்களாட்சி முறை மலர்வதற்கு
இவ்வல்லுநர் குழுக்களின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய
நாட்டு ஒற்றுமைக்கு வழிவகுக்கும். இதைத்தான் திராவிட இயக்கம் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறது.
திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் பொருளாதார,
சமூக நலத்திட்டங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்ட காரணங்களால்தான்
தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருக்கிறது.
மத்திய நிதிக்குழுவின்
நிதிப்பகிர்வினால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியாதாரங்கள்
தொடர்ந்து குறைந்து வந்தபோதும் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில்
தமிழ்நாடு இந்தியாவின் 14 பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில்
தொடர்ந்து இருந்து வருகிறது.
2001ல் வாஜ்பாய் ஆட்சியில் வெளி வந்த
மானுட மேம்பாட்டு அறிக்கை தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை கட்டுப்பாடு,
சத்துணவு போன்ற சமூகத் திட்டங்களின் வெற்றிகளைப் பாராட்டியுள்ளது.
பின்னர்
2011இல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட மானுட மேம்பாட்டு
அறிக்கை தமிழ்நாட்டின் சமூகநலத் திட்டங்களைப் பாராட்டியுள்ளது.
அமர்த்தியா
சென், ஜீன்டிரேஸ் எழுதிய 'நிலையில்லாத புகழ்-இந்தியாவும் அதன்
முரண்பாடுகளும்' நூலில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைவிட பெண்கள்,
குழந்தைகள் நல வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது (பக்77),
இவ்வகையான சமூக-பொருளாதாரக் காரணிகளை ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சியடைந்த
அய்ரோப்பிய நாடுகளோடு சமநிலையில் உள்ளது என்கின்றனர். ஊழலைக் காட்டி வளர்ச்சியை மறைக்கக் கூடாது
பெண்களுக்கு
சொத்தில் சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, உள்ளாட்சியில்
33% இடஒதுக்கீடு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில்தான்
நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படுகிற பொதுச்செலவு 44% அளவிற்குச் சமூக
மேம்பாடு, சமூகநலத் துறைகளுக்குச் செலவிடப்படுகிறது. உலகளவில் உள்ள
பொருளாதார அறிஞர்கள் தனிநபர் வருமானம் மட்டும் ஒரு நாட்டின் அல்லது
மாநிலத்தின் வளர்ச்சியை எடுத்துரைக்காது, அடிப்படை மானுடத் தேவைகளை
நிறைவேற்றினால்தான் பொருளாதார வளர்ச்சியின் பயன் மானுட முன்னேற்றத்தில்
முடியும் என்கின்றனர்.
2016 ஐக்கிய நாடுகள் மன்றத்தால் அளிக்கப்பட்ட
மானுட மேம்பாட்டு அறிக்கையில் வளர்ச்சிக் குறியீட்டு வரிசைப்பட்டியலில்
இந்தியா 131 இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக,
இவ்வறிக்கையில் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றினால்தான்
தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. இது திராவிட இயக்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும்
சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரமே ஆகும்;.
1990இல்
உலகமயமாதல் கொள்கை பின்பற்றப்பட்ட பிறகு, இந்தியாவில் ஊழலும்
முறைகேடுகளும் எல்லா மாநிலங்களிலும், எல்லா கட்சிகளிலும் பெருகி வருகிறது.
தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.
இருப்பினும், எதிர்கால திராவிட இயக்கத் தலைமை நேர்மையான அரசியலை நிலைநிறுத்துவதற்கு முன்வரவேண்டும்.
திராவிட
அரசியலை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு பெற்றுவரும் தொடர் வளர்ச்சியையும்,
மானுட மேம்பாட்டுக் குறியீடுகளையும், செய்த சாதனைகளையும் மேற்கூறிய ஒரு
காரணத்தைக் குறிப்பிட்டு மறைப்பது சரியான திறனாய்வன்று.
( இக்கட்டுரை ஆசிரியர் ,தமிழ் நாடு திட்டக்கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக