வியாழன், 14 ஏப்ரல், 2016

சோனியா: மம்தா பானர்ஜி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில்தான், நாட்டிலேயே அதிகமாக, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டினார். மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. இதையொட்டி, மால்டா மாவட்டத்துக்குள்பட்ட சுஜாபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர் மறுந்துவிட்டார்.

அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில், மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. இந்த மாநிலத்தில் ஒரு பெண் முதல்வராக இருக்கும்போதிலும், இங்குதான் நாட்டிலேயே அதிகபட்சமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக செயல்படுகின்றன.

இரண்டு கட்சிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் மம்தா பானர்ஜி, மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் இதனை நாம் நன்கு அறியலாம்.

மேற்கு வங்கத்தில் சீட்டு நிதி மோசடியின் வாயிலாக மக்களை ஏமாற்றிய நிறுவனங்கள் மீது மோடியும், மம்தாவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம், அவர்கள் இருவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று சோனியா குற்றம்சாட்டினார்

கருத்துகள் இல்லை: