செவ்வாய், 12 ஏப்ரல், 2016

தமிழக மருத்துவ மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு அநியாயம்....சமுக சமத்துவ டாக்டர்கள் எதிர்ப்பு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு,  அகில இந்திய நுழைவுத் தேர்வை  உச்ச நீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசு திணிப்பது  சரியல்ல. இது மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசு நடத்தும் ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு’ ( National Eligibility cum Entrance Test- NEET) அடிப்படையில் மட்டுமே அமைத்திட வேண்டும் என  இந்திய மருத்துவக் கழகமும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2013-ம் ஆண்டு அதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து தமிழக அரசும், பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு’ அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி அதை நடத்திட தடைவிதித்தது.


இந்நிலையில், இவ்வழக்கில் சீராய்வு மனுவை இந்திய மருத்துவக் கழகமும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தன. இந்த சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வை‘ நடத்திடவும் அனுமதி வழங்கியுள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மத்திய அரசு தனது 'தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை’ புகுத்துவது மாநில அரசுகளின் உரிமைக்களுக்கு எதிரானது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்கு எதிரானது.

பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில், பொதுப்பள்ளி முறை இல்லாத ஒரு சூழலில், மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்களுக்கும் அகில இந்திய அளவில்  தகுதிகாண் - நுழைவுத் தேர்வை திணிப்பது நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும். இம்முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசுகளே அமைத்துக்கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது. அதே சமயம், ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்வி இடங்களுக்களுக்கான  மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்திட வேண்டும். நுழைவுத்தேர்வை ஒரு தகுதித் தேர்வாக மாற்றக்கூடாது. அதாவது ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மதிப்பெண்ணை பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. நுழைவுத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக (Entrance Test) மட்டுமே நடத்த வேண்டும்.

எனவே, இந்தியாவில் இரண்டே முறைகளில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மாநில அரசுகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கும் மத்திய அரசு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதற்குத் தேவையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். உச்சநீதி மன்றத்தின் மூலம் மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயல்வதை கைவிட வேண்டும். உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவால், தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, தமிழக மாணவர்களின் உரிமைகளை பாதுக்காக்க போர்க்கால அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்  விகடன்.com

கருத்துகள் இல்லை: