வெள்ளி, 15 ஏப்ரல், 2016

அழகிரிக்கு ராஜ்யசபா உறுதிமொழி ?

ஆதரவாளர்களுக்கு, 'சீட்' வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதியை, மார்ச், 24ல், அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது, கூட்டணி விவகாரம், கட்சி நிலவரம் குறித்தும், கருணாநிதியின் சுற்றுப்பயணம் குறித்தும், ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது கருணாநிதியும், அழகிரியும் தொலைபேசியில் பேசி வருகின்றனர்.கடந்த, 8ம் தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த, தமிழரசு மணிவிழாவில் அழகிரி பங்கேற்றார். ஆனால், அப்போது, கருணாநிதியை அவரால் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், அந்த பட்டியலில் அழகிரி ஆதரவாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.  அழகிரியை பற்றி கேட்டால் ஸ்டாலின் படுமோசமாக முகத்தை வைத்துகொண்டு எகிறுவது ஏன்? அவர் உங்கள் சொந்த அண்ணன்தானே? கழகத்துக்கு பெரிய வெற்றிகளை எல்லாம் கொடுத்த ஒரு தொண்டர் என்ற மரியாதையாவது வேண்டாமா? இது திமுகவுக்கு நல்லதல்ல ....

இதனால், அழகிரி எந்த அதிருப்தியும் அடையக்கூடாது என்பதற்காக, அவருக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதற்கு அழகிரி, 'அதுக்கு, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயிச்சு வரணுமே' என, கிண்டலாக கூறிய அழகிரி, 'ஜூன் முதல் நம்ம ஆட்சி தான்' என, தன் பாணியில், 'கமென்ட்' அடித்துள்ளார்.
இப்பின்னணியில், நேற்று காலையில் கருணாநிதியை சந்தித்துள்ளார். தன் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது வருத்தம் அளிப்பதாகவும், வேட்பாளர்கள் பட்டியல் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், மனக்குமுறலை பதிவு செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'வேட்பாளர்கள் அனைவரும் தி.மு.க.,வினர் என்பதால், அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் வெற்றி பாதிக்கக் கூடாது' என, கூறியுள்ளார்.
வெளியே வந்த அழகிரி, நிருபர்களிடம், 'தன் தாயார் தயாளுவை சந்திக்க வந்ததாகவும், அரசியல் பற்றி தான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை' என, கூறிவிட்டு சென்று விட்டார்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'சொல்வதற்கு ஒன்றுமில்லை!
'
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், ''தன் தந்தையை சந்திக்க அழகிரி வந்துள்ளதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை: தேவையற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய  அவசியம் இல்லை .  தேர்தல் பிரசார முன்னேற்பாடுகளில், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.

- நமது நிருபர் - தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: