வியாழன், 14 ஏப்ரல், 2016

தெறி....சத்திரியன் படத்தின் காப்பி இல்லையாம்...இயக்குனர் அட்லி தெரிவிப்பு


 ’சத்ரியன்’ படத்தின் காப்பியா ‘தெறி’? - இயக்குநட் அட்லி பேட்டி
சென்னை,ஏப்.13 (டி.என்.எஸ்) விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
‘தெறி’ படம் குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அட்லி,  “’தெறி’ படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. படத்தின் கதையை விஜய் அண்ணாவிடம் சொன்னபோது, அதை கேட்டுவிட்டு சூப்பர் என்று சொன்னார், தற்போது படத்தை பார்த்துவிட்டும் அதையே தான் சொன்னார். தயாரிப்பாளர் தானு சாரும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார். மொத்தத்தில் ‘தெறி’ அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்று கூறியதோடு, நிருபர்களிடன் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

கேள்வி : படத்திற்கு தலைப்பு வைக்க ஏன் நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டீர்கள், ‘தெறி’ என்ற தலைப்பு எதனால் வைத்தீர்கள்?
இந்த படத்திற்காக நான் பல தலைப்புகளை தேர்வு செய்தேன். ஆனால், அவை அனைத்துமே ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது, அதனால் அந்த தலைப்புகளை வைக்கமுடியவில்லை. ‘தெறி’ என்ற வார்த்தை மற்ற படத்தில் இருந்து காப்பியடித்தது அல்ல, இப்படத்தின் பூஜை போடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. அப்போதே நான் பேட்டியில், இந்த படம் தெரிக்கும் என்று பேட்டியளித்தேன், அதன் பிறகே இந்த வார்த்தை ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்த வார்த்தையை நான் அடிக்கடி பயன்படுத்துவேன், அதையே தலைப்பாகவும் வைக்க எண்ணினேன், அது கதைக்கும், படத்தின் வேகத்திற்கும் பொருத்தமாக இருந்ததால், வைத்துவிட்டேன்.
இந்த படத்தின் குழந்தை நட்சத்திரத்தை முதன்மை படுத்துவது ஏன்?
இது விஜய் சாருடைய படம் என்பதைக் காட்டிலும் இப்படத்தில் பல விஷயங்களை இருப்பதை காண்பிக்கத்தான். படத்தில் விஜய் சாருக்கு நிகராக பேசப்படும் வேடமாக குழந்தை நட்சத்திரம் வேடம் இருக்கும், எனவே இது குழந்ந்தைகளுக்கான ஒரு படமாகவும் இருக்கும் என்பதால் தான் அப்படி காட்டுகிறோம்.
உங்களுடைய ’ராஜா ராணி’ மவுன ராகம் பட சாயலில் இருந்தது, அதேபோல இந்த படமும் ‘சத்ரியன்’ சாயலில் இருக்கிறதே?
கணவன் மனைவி, என்ற சப்ஜட்டில் படம் எடுத்தாலே அது ‘மவுன ராகம்’ சாயலாகத்தான் தெரியும். அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கிறது, மற்றபடி இதுவரை யாரும் இதுபோல என்னிடம் சொல்லியதில்லை. ஒரு படத்தை பார்க்கும்போது, பலருக்கு பல எண்ணம் தோன்றும் அப்படி தான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது. மற்றபடி, எந்த படத்தையும் நான் காப்பியடிக்கவில்லை.
இயக்குநர் மகேந்திரனை நடிக்க வைத்த அனுபவம் பற்றி?
மிகப்பெரிய இயக்குநரான அவரை என் படத்தில் நடிக்க வைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. படப்பிடிப்பின் முதல் நாள், நான் அவருக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க சற்று தயங்கினேன். பிறகு அவர் என்னிடம் ரொம்ப சாதாரணமாக பயகி, என்னை கோச் என்று அழைத்து, “நான் என்ன செய்ய வேண்டுமோ அதை ஒரு முறை நீங்கள் செய்து காட்டுங்கள்” என்று சொல்வார். இப்படி தொடர்ந்து அவர் கொடுத்த ஒத்துழைப்பு என்னால் மறக்க முடியாது. இனி நான் எத்தனை படங்கள் இயக்கினாலும், அவரைப் போல ஒரு நடிகரைப் பார்ப்பேனா என்பது தெரியாது.
படத்தில் இடம்பெறும் வசனங்களையும் ரொம்பவே பாராட்டி பேசினார். அதுமட்டும் இன்றி, அவர் இயக்கும் படத்திற்கு என்னை வசனம் எழுதவும் கேட்டுக்கொண்டார். இது எனக்கு தேசிய விருதுக்கு சமம் என்றே கருதுகிறேன்.
‘தெறி’ இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் ஒகே சொல்லிவிட்டாராமே?
‘தெறி’ படத்தை இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஐடியா என்னிடம் உள்ளது. படத்திலும் அதற்கான இடம் இருக்கிறது. ஆனால், அதற்கு விஜய் அண்ணா ஒகே சொல்லிவிட்டார் என்ற தகவல் பொய்யானது.
உங்களுடைய அடுத்த படம்?
எனது அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், ‘தெறி’ படத்தின் வெற்றியை முழுமையாக அனுபவித்த பிறகே நான் அடுத்த படத்தின் வேலைகளில் ஈடுபடுவேன். திருமணம் முடிந்து எங்கேயும் செல்லவில்லை, முதலில் மனைவியுடன் எங்கேயாவது செல்ல வேண்டும். பிறகு தான் அடுத்தப்படத்தின் வேலையை தொடர வேண்டும்.
இந்த சந்திப்பின்போது படத்தின் நாயகி எமி ஜாக்சன், நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரும் உடன் இருந்தார்கள்.  //tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: