வியாழன், 9 ஏப்ரல், 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்! நூற்றாண்டின் இணையற்ற இலக்கியவாதி திரைப்பட இயக்குனர் ...

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(8.4.2015) காலமானார். யாருடைய சாயலும் இல்லாமல் தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டு, எழுத்துலகில் புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே எழுதுவதை நிறுத்தி கொண்டிருந்த ஜெயகாந்தன், கடந்த பல மாதங்களாகவே உடல்குன்றியிருந்து வந்து, சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் இன்று பிரிந்தது. 1934-ல் கடலூரில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார் ஜெயகாந்தன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

  ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ கட்சியின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப்பட்டது. ஆதலால் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராஜருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார்.
இவரது நாவல்களான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகியவை இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாக வந்தன. ‘ஊருக்கு நூறு பேர்’ என்ற கதையை இயக்குநர் லெனின் திரைப்படமாக்கினார். ’உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இவரே இயக்கினார். சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. சாகித்திய அகாதமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர் இன்று 8.4.2015 இரவு 9 மணிக்கு காலமானார்.ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர்

ஜெயகாந்தன் காலமானார் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(8.4.2015) காலமானார் nakkheeran.in

கருத்துகள் இல்லை: