திங்கள், 6 ஏப்ரல், 2015

21 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி ! மேலும் பல அதிமுகவினர் சிக்குகிறார்கள்

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியையும், பொறியாளர் செந்திலையும் நேற்று முன்தினம் இரவு, சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இருவரிடமும், விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். குற்றங்கள்: அப்போது, இருவரும் தங்களுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே, இருவரும் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்த பின், விசாரணைக்கு ஆஜராகும்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும், செந்திலுக்கும், 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதை ஏற்று, இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆஜராகினர். முத்துக்குமாரசாமி கைப்பட எழுதிய டைரி கிடைத்ததே, இந்த வழக்கில், முக்கிய துருப்பு சீட்டு. அதில், எல்லா விவரங்களையும், முத்துக்குமாரசாமி தெளிவாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழு டிரைவர் பணியிடங்களுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம், 21 லட்சம் கேட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் உள்ளிட்டோர் நெருக்கடி கொடுத்ததையும் டைரியில், அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து,முத்துக்குமாரசாமியின் மொபைல் போனில் பேசியவர்கள் யார் என்ற விவரங்களை திரட்டினோம்.

உளவு பிரிவு...:
தலைமை பொறியாளர் செந்தில், லோக்கல் அ.தி.மு.க.,வினரிடமும் முத்துக்குமாரசாமியிடமும், மாறி, மாறி பேசியிருக்கிறார். முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரும், செந்தில் பேசியது தெரிய வந்தது.இதையெல்லாம் குறிப்பிட்டு விசாரிக்கவும், இருவரும், தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசியதை ஒப்புக் கொண்டனர். உள்ளூர் உளவு பிரிவு போலீசாரும் இதை, ஏற்கனவே உறுதி செய்திருந்தனர். தலைமைப் பொறியாளர் செந்தில், இந்த விவகாரத்தில் அளவுக்கு மீறி நடந்து கொண்டதாகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அதே போலவே, அக்ரி குறித்து, செந்திலும், பலதகவல்களை தானாகவே முன்வந்து சொன்னார்.

போலீஸ் காவல்:
தற்கொலைக்கு தூண்டியது உறுதியானதால், இருவரையும் கைது செய்தோம். அவர்களிடம் நிறைய விசாரிக்க வேண்டியிருப்பதால், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் தீர்மானித்துள்ளோம். நெல்லை, அ.தி.மு.க.,வினர் சிலரை, இவ்வழக்கில் கைது செய்வது குறித்து மேலிடத்தில் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்ததும், அவர்களையும் கைது செய்வோம். இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: