புதன், 8 ஏப்ரல், 2015

புரோக்கர்களின் பணத்தாசையால் அப்பாவி இளைஞர்கள் 'பலிகடா' - ஜவ்வாதுமலை கிராமங்களில் பதற்றம்

புரோக்கர்களின் பணத்தாசையால் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டச் செல்லும் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாகவும் கடத்தலில் மூளையாக செயல்படும் நபர்களைப் பிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக- ஆந்திர எல்லையில் அதிக அளவிலான செம்மரங்கள் வளர்ந்துள்ளன. சேஷாச்சலம் வனப்பகுதியில் வெட்டி கடத்தப்படும் செம்மரங்கள் பெரும்பாலும் வேலூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. கிறிஸ்டி யான்பேட்டை, பொன்னை சோதனைச் சாவடி மற்றும் சோளிங்கர் வழியாக செம்மரம் கடத்தப்படுகிறது. ஆம்பூர், ராணிப்பேட்டை, சோளிங்கர், காவேரிப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் செம்மரங்கள் பதுக்கி சென்னைக்கு கடத்தப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை செம்மரக் கடத்தல் வழக்கில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து, சுமார் 40 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
மோகனாம்பாள் வழக்கு
வேலூரைச் சேர்ந்த கரகாட்ட பெண் கலைஞர் மோகனாம்பாள் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.7 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம், செம்மரக் கடத்தல் தொழிலில் கிடைத்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் வேலூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் முக்கிய புள்ளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் தற்போது நிலு வையில் உள்ளன. கடத்தல் கும்பலின் பின் னணியை முழுமையாக போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஏமாறும் அப்பாவி இளைஞர்கள்
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள ஜமுனாமரத்தூர் மலைத் தொடரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் கள் பலர் செம்மரம் வெட்டும் கூலித் தொழிலில் ஈடுபடுகின்றனர். திருப்பதியில் செம்மரம் வெட்டச் செல்லும் இளைஞர் களில் பெரும்பாலானோர் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப் படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களுக்குச் சென்ற ஆந்திர மாநில வனத்துறையினர், ‘‘ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட் டும் கும்பலை சுட்டுப் பிடிப்போம்’’ என எச்சரித்துள்ளனர்.
புரோக்கர்கள் பணத்தாசை
பெயர் கூற விரும்பாத மலை கிராம மக்கள் சிலர் கூறும்போது, ‘‘மலைவாழ் கிராம இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இவர்களின் வாழ்வா தாரத்துக்கு அரசு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத் தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. இவர்களைக் குறி வைத்து புரோக்கர்கள் சிலர் பணத்தாசை காட்டி பலிகடாவாக்கிவிடுகின்றனர்.
ஆட்களை அழைத்துச் செல்லும் புரோக்கர்களைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க சிறப்புத் திட்டங்கள் செயல் படுத்த வேண்டும். அப்போதுதான் யாரும் செம்மரம் வெட்டச் செல்லமாட்டார்கள். செம்மரம் வெட்டும் கும்பல் குறித்து தகவல் கொடுத்தால் உயிருக்கு உத்தர வாதம் இல்லை’’ என்றனர்.
ஜவ்வாது மலையில் பதற்றம்
என்கவுன்ட்டரில் இறந்த சிலரது பாக்கெட்களில் திருவண்ணாமலை மாவட் டம் போளூர் மற்றும் வேலூரில் இருந்து திருப்பதிக்கு வந்த பேருந்து டிக்கெட் இருந்ததாகக் கூறப்படுகிறது. போளூர் டிஎஸ்பி கணேசன் மற்றும் போலீஸார், ஜவ்வாது மலைக்கு நேற்று சென்றனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து 227 மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்க ளுக்கு தகவல் தெரிவித்தனர். அதில், நம்மியம்பட்டு, காணமலை, ஜமுனா மரத்தூர், வீரப்பனூர், தானியார் கொல்லை கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக் கானவர்கள், ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றது தெரியவந்தது.
மரம் வெட்டச் சென்றவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று போலீஸாரிடம் மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் பதற்றமாக உள்ளனர். ஜமுனாமரத்தூர், நம்மியம்பட்டு, அத்திப்பட்டு உட்பட முக்கிய இடங்களில் போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
‘‘மலைக் கிராமங்களில் காணாமல் போனவர்கள் யார்? என்ற விவரங்கள் சேகரித்து வருகிறோம்.
சந்தேக நபர்களின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு வருகிறோம். தனிப்பிரிவு போலீஸார் மலைக் கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நபர்களை தொடர்பு கொண்டு விவரம் சேகரிக்கின்றனர்’’ என்று போலீஸார் தெரிவித்தனர்.
திருப்பதி பயணம்
இதற்கிடையில், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா நேற்று மாலை வேலூர் வந்தார். காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில்குமாரி (வேலூர்), முத்தரசி (திருவண்ணாமலை) ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக ஐஜி மஞ்சுநாதா, ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘திருப்பதி யில் இறந்தவர்கள் வேலூர், திருவண்ணா மலை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் என கூறப்படுகிறது. இறந்தவர்கள் யார் என்பதை அறிய தனி போலீஸ் குழுவினர் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இறந்தவர்களின் புகைப்படத்தை சேகரித்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி யுள்ளனர்.
இந்த படத்தை வைத்து மலை கிராமங்களில் விவரங்கள் சேகரிக்க உள்ளோம். இறந்தவர்களில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது இருந்தால் சடலத்தை உறவினர்கள் உதவியுடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
கிராமத்தை காலி செய்த மக்கள்
பலியானவர்களில் 3 பேர், வேலூர் மாவட்டம் புங்கம்பட்டு நாடு ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் பரவியது. இந்நிலையில், போலீஸ் விசாரணைக்குப் பயந்து, பலர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திர பேருந்து கண்ணாடி உடைப்பு
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழக வாழ் வுரிமை கட்சியின் வேலூர் மாவட்ட அமைப் பாளர் ஷரீப் பாஷா தலைமையில், மாநில அமைப்புச் செயலாளர் தமிழரசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநில அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை தீயிட்டு, கோஷமிட்டனர். ஆந்திர அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வேலூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர்.  
    வ.செந்தில்குமார்  இரா.தினேஷ்குமார் ந.சரவணன் tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: