புதன், 8 ஏப்ரல், 2015

சந்திரபாபுவின் உத்தரவிலேயே 20 தமிழர் சுட்டுப்படுகொலை: ஒய்.எஸ்.ஆர். காங். அதிர்ச்சி தகவல்

திருப்பதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி உத்தரவில்தான் 20 தமிழரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 20 தமிழர் படுகொலை குறித்து ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வாசு ரெட்டி வர்மா கூறியுள்ளதாவது: சந்திரபாபுவின் நேரடி உத்தரவிலேயே 20 தமிழர் சுட்டுப்படுகொலை: ஒய்.எஸ்.ஆர். காங். அதிர்ச்சி தகவல் 20 தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 500 பேர் செம்மரம் வெட்ட வந்ததாக போலீசார் கூறுகிறார்கள். இவர்கள் வரும் போதே போலீசார் ஆந்திர எல்லையில், செக்போஸ்டுகளில் தடுத்து நிறுத்தாதது ஏன்? இந்த கொலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி ஏற்பாட்டில் நடந்து இருக்கிறது. சந்திரபாபு நாயுடு ஒரு நாளைக்கு முன்பே திருப்பதி வந்து விட்டார். மறுநாள் இரவு 8.30 மணி வரை அங்கு இருந்திருக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் தொழிலாளர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உத்தரவின் பேரிலேயே போலீசார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திரமாநில உள்துறை அமைச்சர், ‘மரம் வெட்டிய தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கியதாகவும், சுட்டதாகவும் பதிலுக்கு போலீசார் சுட்டதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு அவர் ஆதாரத்தை காட்ட முடியுமா? என்கவுண்ட்டர் எப்படி நடந்தது என்பதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் நம்மை பகையாளி போல் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கான முழுபொறுப்பையும் சந்திரபாபு நாயுடு ஏற்க வேண்டும். இது போலி என்கவுண்ட்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு வாசு ரெட்டி வர்மா கூறியுள்ளார்.
Read more tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: