வெள்ளி, 17 ஏப்ரல், 2015

அகதிகளை கம்போடியாவுக்கு அனுப்பும் ஆஸி முடிவுக்கு எதிர்ப்பு


ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சக் கோரும் நோக்கில் சட்டவிரோதமான வகையில் படகுகள் மூலம் வருபவர்களை தடுக்கும் முயற்சிகளை இறுக்கிவருவதாக தெரிவிக்கும் ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே அப்படி வந்துள்ள சிலரை கம்போடியாவுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது. நவ்ரூ தீவில் தஞ்சக் கோர்க்கைகளை பரிசீலிக்கும் மையம் மட்டுமே உள்ளது அரசின் இந்த முடிவானது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகதித் தஞ்சம்கோரி படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்வரை அவர்களை நவ்ரூ தீவிலுள்ள முகாம்களில் தடுத்து வைக்கிறது ஆஸ்திரேலிய அரசு.

இந்நிலையில் நவ்ரூவிலுள்ள சிலரை அவர்கள் விரும்பினால் கம்போடியாவில் மீள்குடியேற்றம் செய்ய ஆஸ்திரேலிய அரசு சில முனைப்புகளை செய்து வருகிறது.
ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்கிறார் தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளுக்காக போராடிவரும் refugee action collective அமைப்பின் பேச்சாளர் இயன் ரிண்டௌல்.
கம்போடியாவின் உள்நாட்டுப் பிரஜைகளுக்கே கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க சிரமப்படும் அரசு, எப்படி அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்களின் நலன்களை முன்னெடுக்கும் என அவர் கேள்வி எழுப்புகிறார்.
நவ்ரூ முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கமேர் மொழியை பயிற்றுவிக்க ஆஸ்திரேலிய அரசு எடுத்த நடவடிக்கைகள் கூட பலனளிக்கவில்லை என்கிறார் இயன் ரிண்டௌல்.
ஆஸ்திரேலிய அரசுக்கும் நவ்ரூ அரசுக்கும் இடையே மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த உடன்படிக்கையும் இல்லாததுதான் இதில் பெரிய பிரச்சினை என்கிறார் இயன்.
தமது நாட்டில் யாரையும் மீள்குடியமர்த்த நவ்ரூ உடன்படவில்லை. அகதித் தஞ்சம் கோருபவர்கள் தமது நிலப்பரப்பில் தற்காலிகமாகத் தங்கலாம் என்பதை மட்டுமே நவ்ரூ ஏற்றுக் கொண்டுள்ளது.
தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் மையம் மட்டுமே அங்குள்ளது.
அகதிகள் என்று கண்டறியப்படுவர்களை எங்கு மீள்குடியமர்த்துவது என்பது அவர்கள் பொறுப்பல்ல, எனவே உடன்பாட்டிலுள்ள அந்த பெரிய இடைவெளியை நிரப்புவதற்கே கம்போடியாவுக்கு ஆட்களை அனுப்ப ஆஸ்திரேலிய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று கூறுகிறார் இயன் ரிண்டௌல்   bbc.co.uk/tamil

கருத்துகள் இல்லை: