வெள்ளி, 17 ஏப்ரல், 2015

தீர்ப்பு தள்ளிப் போகிறது: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் 15 நாட்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதி கடிதம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிடோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து வுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது. இதனால் தீர்ப்பு தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்தார். இவ்வழக்கில் குற்றவாளிகள் மற்றும் அரசு தரப்பு வாதம் நிறைவடைந் ததால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசு வழக் கறிஞர் பவானிசிங்கின் நிய மனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாள‌ர் அன்பழகன் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர். பானுமதி அடங்கிய அமர்வு, சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதித்தது.
இந்தநிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் நேற்று முன்தினம் பவானிசிங் நியமனம் தொடர்பாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி மதன் பி.லோகுர், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியம‌னம் செல்லும்' என்றும் தீர்ப்பு வழங்கினர்.
மேலும், ''பவானிசிங்கை நீக்கக் கோரும் மனுவை பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்குவது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியே முடிவு செய்யலாம்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நீதிபதி குமார சாமி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. அதில், உச்ச நீதிமன்றம் விதித்த கால அவகாசத்துக்குள் தீர்ப்பு வழங்க இயலாததால் வருகிற 30-ம் தேதிவரை கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்'' என கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து கூற மறுப்பு
நீதிபதி குமாரசாமியின் திடீர் கடிதம் குறித்த செய்தியால் ஜெயலலிதா வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பாட்டீலி டம் கேட்டபோது, ''நீதிபதி குமாரசாமியின் கடிதம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து கூற முடியாது'' என்றார்.
எனவே, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நீதிபதி குமாரசாமியை செய்தியாளர்கள் நேற்று நேரடி யாக சந்தித்து கருத்துக் கேட்க முயற்சித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்திக்க நீதிபதி குமாரசாமி மறுத்து விட்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர் மூலம், ''வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், எந்த கருத்தும் கூற விரும்பவில்லை'' என சொல்லி அனுப்பினார்.
இன்று முக்கிய முடிவு
நீதிபதி குமாரசாமிக்கு நெருக்க மானவர்கள் கூறியபோது ''பவானி சிங் விவகாரத்தில் முடிவு எட்டப் படாததால் தீர்ப்பு வழங்குவது தொடர்பாக நீதிபதி குமாரசாமி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்'' என்றனர்.
இதனிடையே ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் நாளையுடன் நிறைவடைகிறது. தங்களது ஜாமீனை நீட்டிக்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிற‌து.  /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: