திங்கள், 14 ஜூலை, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேர்

புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் அரசுகளுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்தி வரும் சண்டையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருக்கும், பஷார் அல் - அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், அல் - குவைதா ஆதரவு பயங்கரவாதிகளும் சேர்ந்து கொண்டுள்ளதை அடுத்து, அங்கு பயங்கர ரத்தக்களறி நடைபெற்று வருகிறது.அது போல், ஈராக்கிலும், பிரதமர் அல் - மாலிகி தலைமையிலான அரசுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.இந்த பயங்கரவாத குழுக்களில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 18 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இருவர், தானே நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர்.பயங்கரவாதிகளுடன் இணைந்திருப்பதில் பெரும்பான்மையினர், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில், அல் - குவைதா, தலிபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்பில், இந்தியா போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துள்ளதாக, அவ்வப்போது தகவல்கள் வெளியாகிஉள்ளன. dinamalar.com

கருத்துகள் இல்லை: