திங்கள், 6 ஜனவரி, 2014

அழகிரி: வெளிப்படையாக பேசுவதே எனது பலவீனம்! அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டிப் பூசல்கள் இருக்கின்றன.


திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி எம்.பி., தனியார் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார்.
அதில், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து திமுக விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிமுவில் சேர மாட்டேன். திமுகவில்தான் தொடர்வேன். காங்கிரஸ் கட்சியில் நான் சேரப் போவதாக திமுக உறுப்பினர்களே நாடாளுமன்ற வளாகத்தில் என் முன்பே பேசினர். அதைப் போன்ற புரளிதான் இதுவும்.
ஒரு நாளும் நான் கட்சியில் பதவி கேட்டதே இல்லை. மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக பெரிய வெற்றி பெறும் அளவுக்கு உழைத்தேன். இதைப் பாராட்டி  தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தனர். ஆனால், இப்போது என் வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் தென் மண்டலத்தில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றது. இப்படித் தென்மண்டலத்தில் திமுகவை வளர்த்துள்ளேன்.
ஆனால் இப்போது தென்மண்டலம் தொடர்பாக என்னிடம் கலந்து ஆலோசிப்பதே இல்லை. திமுகவின் தலைவர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. அண்ணாவுக்குப் பிறகு நான் ஏற்கும் ஒரே தலைவர் கலைஞர்தான்நா.
விஜயகாந்த்தை அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகம் இல்லை. கடந்த முறை தேர்தல் நேரத்தில் விஜயகாந்த்தை, "என் நண்பர், கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு எடுப்பார்" என்று கூறினேன்.
அதற்கு அவர், "என்கூட அழகிரி கோலி விளையாடினாரா, பட்டம் விட்டாரா' என்று கேட்டார். நண்பர் என்று கூறியதற்கு யாராவது இப்படிச் சொல்வார்களா? விஜயகாந்த், தற்போது எல்லாக் கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார்.
திமுக, அதிமுக கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இதுவரை டெல்லியில் போய் போட்டியிட்டதா. இவர் தேமுதிக பெரிய கட்சி என்று சொல்லி டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்டு 2 ஆயிரம் ஓட்டு வாங்கியிருக்கிறார். இவர் கூட கூட்டணி வைத்தால் எப்படி உருப்படும்.
திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதைக் கொண்டே தேர்தலைச் சந்திக்கலாம். திமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டிப் பூசல்கள் இருக்கின்றன.


டி.எம்.எஸ். பாடல்களை சின்ன வயதில் இருந்தே கேட்பேன். அவருக்கு யாரும் விழா எடுக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனால் அவருக்கு மதுரையில் விழா எடுத்தோம். விளையாட்டுகளிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கிரிக்கெட், டென்னிஸ், ஆக்கி என ஆர்வமாக இருப்பேன். பார்ப்பேன். கிரிக்கெட் மைதானங்களுக்கு போவேன்.
எம்.பி., பதவியே இன்னும் முடியவில்லை. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவு எடுக்கலாம். கழகம் எப்படி கூட்டணி அமைக்கிறது. எந்த தொகுதியை ஒதுக்குகிறது என்பதை பார்த்து முடிவு செய்யப்படும்.
பொதுவாக கட்சி பொதுக்கூட்டங்களில் நான் கலந்துகொள்வதில்லை. தென்மண்டலங்களில் நடக்கும் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். தேனிக்கு சென்று வந்திருக்கிறேன்.
மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல், வெளிப்படையாக பேசுவதே எனது பலவீனம். எனது ஆதரவாளர்கள் எனது பலம். திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான திட்ங்கள் நிறைய செய்யப்பட்டது. இருப்பினும் 2011 தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. வெற்றி தோல்வி என்பது அரசியலில் சகஜம்.
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க செய்தோம். உர விலையை குறைக்க முயன்றோம். பொருளாதார சூழ்நிலை காரணமாக அது முடியவில்லை. விலையை ஏற்றாமல் பார்த்துக்கொண்டோம். அதேபோல மருந்து துறையிலும் பொருளாதார சூழ்நிலை காரணமாக விலையை குறைக்க முடியவில்லை. டெல்லி, ஆக்ராவில் இருப்பதைப்போல அதிநவீன வசதியுடன் இலவச கழிப்பறையை 13 இடங்களில் மதுரையில் அமைக்கப்பட்டது. இன்று அதனை கட்டண கழிப்பறையாக மாற்றிவிட்டனர். தென்மாவட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தேன். அதனை தற்போது எடுத்துவிட்டனர். மாவட்டத்திற்கு ஒரு பாலிடெக்னிக் என்பதை மாற்றி இரண்டு பாலிடெக்னிக் கொண்டு வந்தேன்.
எம்.ஜி.ஆர். எங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்புடன் இருப்பார். எனது அப்பா, எனது பாட்டி மீது ரொம்ப அன்பாக இருப்பார். சந்தர்ப சூழ்நிலை எங்களைவிட்டு அவர் பிரிந்துவிட்டார். நாங்கள் அவரது வீட்டுக்கு போனால் சாப்பிடாமல் வெளியே வரமுடியாது. அவர் பக்கத்தில் என்னை உட்கார வைத்து நான் சாப்பிட ஆரம்பித்தவுடன்தான் அவர் வெளியே போவார். ஒரு தடவை நான் சாப்பிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னதற்கு கோவித்துக்கொண்டார். இங்க வரும்போது ஏன் சாப்பிட்டு வந்தாய் என கோவித்துக்கொண்டார். மற்றவர்கள் எல்லாம் கருணாநிதி, கருணாநிதி என்று சொன்னாலும், அவர் மட்டும் கலைஞர் என்று சொன்னார். மற்றவர்கள் கருணாநிதி என்று சொன்னால் கூட அவர்களை கூப்பிட்டு கண்டித்தார்.

கட்சியில் என்னை புறக்கணித்தாலும், என்னை ஆதரிப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நான் சாகும் வரை உழைத்துக்கொண்டிருப்பேன் என்றார்..nakkheeran.in

கருத்துகள் இல்லை: