ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கார்ப்பரேட் பிரபலங்கள் ஆம் ஆத்மியில் சேர காரணம் ?

புதுடில்லி : டில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாக இணைபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களும், முக்கிய பிரமுகர்களும் ஆம் ஆத்மியில் அதிகளவில் இணைந்து வருகின்றனர்.

இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஜனவரி 01ம் தேதியன்று ஆம் ஆத்மியில் இணைந்தார். முன்னதாக டிசம்பர் 31ம் தேதி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., மீரா சன்யாலும் ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த மக்கள் ஆம் ஆத்மி கட்சியை அதிகம் விரும்புவது ஏன் என பாலகிருஷ்ணனுடன் பணியாற்றிய மோகன்தாஸ் பாய் தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது : அவர்கள் ஆம் ஆத்மியில் சேர்ந்து வருவதற்கு மிக முக்கியமாக காரணம் உள்ளது;
பணவீக்க உயர்வு, மோசமான ஆட்சி முறை ஆகியவற்றால் தற்போதைய அரசு மீது ஏமாற்றமும், கோபமும் ஏற்பட்டுள்ளது; கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகரித்திருப்பதே கார்ப்பரேட் மக்களின் வெறுப்பிற்கு காரணம்; ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டு மக்களை கைவிட்டு விட்டது; இதனால் மக்கள் ஆத்திரமும், அதிருப்தியும் கொண்டுள்ளனர்; இதனால் ஒரு மாற்று தேவை என அவர்கள் கருதுகின்றனர்; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மாற்றாக நரேந்திர மோடி இருப்பார் என அவர்கள் எதிர்பார்த்தனர்; ஆனால் டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கொண்டு வந்த அரசியல் மாற்றம், மோடிக்கு மாற்றாக ஆம் ஆத்மி பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது; கிராமப்புறங்களில் கூட ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை பரவி உள்ளது. இவ்வாறு மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியில் இணைய போவதாக அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், நாடு முழுவதும் ஒரு அரசியல் புரட்சியை ஆம் ஆத்மி ஏற்படுத்தி உள்ளது எனவும், இது தன்னை அதிசயிக்க வைத்ததாகவும், அக்கட்சி மீது ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் ஈர்ப்பின் காரணமாக ஆம் ஆத்மியில் இணைந்ததாகவும் தெரிவித்தார். மீரா சான்யாலை விட பாலகிருஷ்ணன் அரசியலில் நுழைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி நாடு முழுவதும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி லோக்சபா தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,விற்கு ஆம் ஆத்மி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012-13ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை விட 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 2014ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அதே சமயம் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தின் அளவு நவம்பர் மாதத்தில் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: