ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வாக்குபதிவு இயந்திரத்தில் NO VOTE வசதி தேர்தல் கமிஷன் அறிவிப்பு !

வாக்குப்பதிவு எந்திரத்தில், யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் எழுதி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்றால், வேட்பாளர்களை புறக்கணிக்கும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரி, ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம்’ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு அதற்கான வாய்ப்பை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் என்றும், இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு அடியில் ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (ஆங்கிலத்தில் ‘நோட்டா’) என்ற வாசகத்துடன் ஒரு பொத்தானை அமைக்க வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 27–ந் தேதி தீர்ப்பு கூறியது.

யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள், தற்போது அதற்காக வாக்குச்சாவடியில் வைக்கப்படும் பதிவேட்டில் கையெழுத்திடும் முறை ரகசியத்தை காப்பதாக இல்லை என்பதால் அந்த முறையை ரத்து செய்யவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
தேர்தல் கமிஷன் கடிதம்
 வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்து உள்ளது.இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
‘யாருக்கும் ஓட்டு இல்லை’ வசதி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ‘யாருக்கும் ஓட்டு இல்லை’ என்ற வசதியை ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் முடிந்ததும் கடைசியாக, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ என்ற வாசகத்தையும் அதற்குரிய பொத்தானையும் அமைக்க வேண்டும். யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற வேண்டும்.ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில், ‘யாருக்கும் வாக்கு இல்லை’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.
எண்ணவேண்டும்
ஓட்டு எண்ணிக்கையின் போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ என்று பதிவான ஓட்டுகளையும் எண்ணி அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘யாருக்கும் ஓட்டு இல்லை’ வசதியை ஏற்படுத்தி செயல்படுத்த தேவையான பயிற்சிகளை தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது dailythanthi.com

கருத்துகள் இல்லை: